பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

வல்லிக்கண்ணன்


சமுதாய ரீதியான ஒரு பண்பாட்டுச் சிதைவின் எல்லா அலங்கோலங்களையும். பணத்திற்காகவே திட்டமிட்டு வளர்க்கும் வியாபாரப் பத்திரிகைகள் நாளுக்கு நாள் வலிமை பெறுகின்றன.

இவ்வியாபாரப் பத்திரிகைகளின் நடுவே, உயர்ந்த குறிக்கோள்களோடு கூடிய இலக்கிய ஏடுகள் வெற்றி பெற முடியுமா ? வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடுதான் முழக்கம் ஒலிக்கிறது.

வெற்றி என்பதை விற்கப் போகும் பிரதிகளின் எண்ணிக்கையை வைத்து முடிவு கட்டப் போவதில்லை. நடுவில் நின்று போய்விடாமல் தொடர்ந்து வெளிவருவதே கலை—இலக்கிய ஏடுகளுக்கு ஒரு வெற்றி தானே!' ( முழக்கம்-முதல் இதழ்,)

இவ்விதம் சிந்தித்து, அந்தச் சிந்தனையை முழக்கம் ஆக்கத் துணிந்தவர் ஆ. செகந்நாதன், எம். ஏ. அவர் மேலும் அறிவித்தார்:

'முழக்கம் இதழின் நோக்கம் என்ன?'

இப்படி நண்பர்கள் வினவியபோது, திட்டவட்டமான விடையை உடனடியாக என்னால் தரமுடியவில்லை. இலக்கிய ஏடாக இது இருக்கும்; கவிதை, சிறுகதை, ஆய்வு, சமுதாயப் பிரச்னைகள் பற்றிய கட்டுரை இவை இருக்கும் என்று கூறினேன். இவை பத்திரிகையின் உள்ளடக்கமே தவிர நோக்கம் அல்லவே !

பின் எதுதான் நோக்கம் ? இலக்கியத்தை ஊடகமாக்கிச் சமுதாய ரீதியான ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்குவதுதான் நோக்கம் என்பது ஓரளவு சரியாக இருக்கும். இதைவிட அதிகமான கனவுகள் இப்போது வேண்டாம். சொப்பனக் கூடங்களில் இறக்கை கட்டிக் கொண்டு மிதப்பதைவிட நாம் வாழும் நிஜமான மண்ணில் புரள்வதுகூட மேலானது. இந்த ஏடு நிஜங்களை அறிமுகப்படுத்தும். நிழல்களை அடையாளங் காட்டும்'.

முழக்கம் முதல் இதழே நம்பிக்கை அளிக்கும் தரமான தயாரிப்பாக அமைந்திருந்தது.

புவியரசு, வல்லிக்கண்ணன், சக்திக்கனல், ஆ. தனஞ்செயன், செந்நீ, தீவண்ணன் மற்றும் சிலரது கவிதைகளோடு கலில் கிப்ரான் கவிதை ஒன்றின் தமிழாக்கமும் இடம்பெற்றிருந்தது.

இலக்கிய விவகாரங்கள்— ஒரு விசாரணை என்ற தலைப்பில்