பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

219


சமூகத்தில் பல்வேறு துறைகளில் காணப்படும் ஊழல்களைச் சாடியது. பல்கலைக்கழகங்களின் சீர்கேடுகளை அம்பலப்படுத்தியது. கல்லூரிகளில் நிகழ்ந்த போராட்டங்கள் குறித்த உண்மை விவரங்களை விறுவிறுப்பான கட்டுரைகளாகப் பிரசுரித்தது.

உதாரணம் : திருச்சி ஜோசப் கல்லூரியில் நிகழ்ந்தவை பற்றி ‘ஒ... வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே !‘, ‘காந்தி கிராமத்தில் பிராமணர்—மலையாளி லடாய்‘ (காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடந்தது பற்றி), ‘மதுரை பல்கலை (ளை)க் கழகம்‘. . . இப்படிப் பலப் பல.

இன்குலாப், பாவண்ணன், வண்ணச் சிறகு முதலியவர்களின் கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாயின. கல்வித் துறையில் மண்டியுள்ள சீர்கேடுகள் மீது நிஜங்கள் மிகுந்த வெளிச்சமிட்டு, உண்மைகளை எடுத்துக் காட்டியது.

இந்த ரீதியான பத்திரிகைகள் சில இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையிலிருந்து ‘குடிசை‘ வெளிவருகிறது. சமுதாயக் கல்விக்கான கிராமிய இயக்க வெளியீடு என்று அறிமுகம் செய்து கொள்ளும் குடிசை பலவிதமான சமுதாயப் போராட்டச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருகிறது. பல மட்டங்களிலும் நிகழ்ந்து வருகிற ஊழல்களை அம்பலப்படுத்தும் கட்டுரைகளைப் பிரசுரிக்கிறது. கருத்து பொதிந்த கார்ட்டூன்களையும், புதுக்கவிதைகளையும், ரசமான தகவல்களையும், நாட்டு நிலையைச் சுட்டிக் காட்டும் புள்ளி விவரங்களையும் அச்சிடுகிறது.

சிறு பத்திரிகைகளின் நிலை குறித்து குடிசை எழுதியுள்ள ஒரு குறிப்பு கவனத்துக்கு உரியதாகும். . .

‘பேருந்துகளில் இறங்குவோரை இறங்கவிடாமலே முட்டி, மோதி, இடித்து ஏறும் மனித அவசரத்தில், புரட்டிய உடனே எறிவதற்கு அல்லாமல், சிறிது சிந்தனை செலுத்துவதற்கு வேண்டிய மக்கள் பிரச்னைகளைத் தொடும் சிறு பத்திரிகைகளின் வாழ்நாள் நிலைக்குமா என்ற கேள்விகள் இப்போதும் இருந்து கொண்டிருக்கும்போது, சிறு பத்திரிகைகளின் வளர்ச்சியும் பாராட்டத்தகும் விதத்தில் வளர்ந்து வருகிறது. இவைகளுக்கு ஒரு சிறிய வட்டம்தான் என்ற நிலை மாறி இவை பரந்த வட்டங்களிலும் கவனத்தை ஈர்க்கும்போது இவர்களின் வேலைகளிலும் உற்சாகம் கிளம்பும் ‘குடிசை‘யும் நீடித்து நிலைக்கவில்லை.