பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

223


இத்தகைய பயணங்கள் 1980 களிலும் துணிந்து தொடங்கப் படுகின்றன.

பயணம் என்ற பெயரிலேயே ஒரு பத்திரிகை புது டில்லியில் தோன்றியது. சிறப்பாசிரியர் : து. முத்துக்கிருஷ்ணன். இதர பத்திரிகைகளின் போக்கில் திருப்தி அடைய முடியாத சில இளைஞர்களின் முயற்சி.

முதலாவது இதழ் இலட்சிய ஒலிபரப்போடு வெளிவந்தது. வழக்கமான (சுமாரான) புதுக் கவிதைகள், வித்தியாசமான கதைகள், புத்தக விமர்சனம் பிரசுரமாயின.

பயணம் மூன்று இதழ்கள்தான் வந்தது.

தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட பத்திரிகை மஞ்சு, ‘பழமையைத் திரும்பிப் பார்த்துப் பின் புதுமையாய் இனிமையாய்-பல செய்திட வேண்டும் என்ற குறிக்கோளை நெஞ்சில் நிறுத்திச் செயல்படுவோம்’ என முன்வந்துள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சி.

‘எல்லாத் துறைகளிலும் சிந்தனைத் தேன்துளிகளைப் பொழிகின்ற இதழாக மஞ்சு தயாரிக்கப்படுகிறது. இளைய எழுத்தாளர்கள் அநேகர் உற்சாகமாக எழுதுகிறார்கள். எழுத்துத் துறையில் அனுபவமும் நல்ல பெயரும் பெற்றுள்ள தஞ்சாவூர் எழுத்தாளர்களின் துணையும், ‘மஞ்சு‘க்குக் கிடைத்திருக்கிறது. ப்ரகாஷ், நா. விச்வநாதன், சி. எம். முத்து ஆகியோரின் படைப்புகள் மஞ்கவில் வெளிவந்துள்ளன.

தஞ்சாவூர் இலக்கிய நண்பர்கள் ‘சும்மா இலக்கியக் கும்பல்‘ என்று கூறிக் கொண்டு கூடிப்பேசியும், இலக்கிய சர்ச்சைகள் செய்தும், புதுமைகள் பண்ணியும் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மஞ்சுவின் நான்காம் இதழ் ‘தஞ்சை சும்மா இலக்கியக் குழுவினர்‘ தரும் சிறப்பிதழ் ஆக வெளிவந்திருக்கிறது.

இந்தச் சிறப்பிதழில் நல்ல கதைகள்—ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் பிரசுரமாகிற கதைகளிலிருந்து வெகுவாக மாறுபட்டவை— இடம் பெற்றுள்ளன. அவற்றை ப. சிங்காரம் ( புயலிலே ஒரு தோணி என்ற குறிப்பிடத்தகுந்த நாவலைப் படைத்தவர்), நா. விச்வநாதன், சி. எம். முத்து, கரிச்சான் குஞ்சு, மு. செந்தமிழன், ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். மற்றும் கவிதைகளும் கட்டுரைகளும் உள்ளன.

‘மஞ்சு‘ வின் ஒவ்வொரு இதழ் அட்டையிலும் புதுமை ஓவியம் அச்சிடப்பட்டு, அதற்கு சுவாரஸ்யமான— விரிவான விளக்கம் உள்ளே