பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

257


உதக மண்டலத்திலிருந்து வெளிவந்தது பனிமலர். ஆசிரியர் அரு. அய்சானுல்லா.

‘ப்ருந்தாவனம்‘ பெங்களூரிலிருந்து வெளிவரும் இலக்கியப் பத்திரிகை.

‘அறிவுத்தேடலுக்கான ஒரு முயற்சி என்ற ஒத்துக் கொள்ளலுடன் வெளிவந்த ப்ருந்தாவனம், இன்னும் அதிகத் தெளிவுள்ள ஒரு பாதையைத் தனக்கென வகுத்துக் கொள்வதில் சிறிது காலம் தாழ்த்தி, மறுபடியும் வெளிவந்துள்ளது‘ என்று அதன் ஆறாவது இதழில் அறிவித்தது.

‘சிறு பத்திரிகைகள் தங்களுக்கென ஒரு வட்டத்தை இட்டுக் கொண்டு அவற்றினுள்ளேயே உழலும்போது, பெருவாரியான வியாபாரப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்வதில் தேக்கமடைகின்றன அல்லது தோல்வியுறுகின்றன. இந் நிலையைத் தவிர்க்கச் சிறு பத்திரிகை வாசகர்களுக்கு மட்டுமேயல்லாது, மற்ற வாசகர்களுக்கும் பொதுவான விஷயங்கள் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்துதல் அவசியமாகிறது. எனவே வியாபாரப் பத்திரிகைகள் இன்று தங்கள் வாசகர்களிடையே அறிமுகப்படுத்தியுள்ள கலை இலக்கியப் போக்குகளையும் வாழ்க்கை மதிப்பீடுகளையும் விமர்சித்து, மாற்றுப் படைப்புக்களை அவர்கள் மத்தியில் அறிமுகம் செய்கின்ற வழியிலும் இடைநிலைப் பத்திரிகைகளின் (middle magazines) அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் ப்ருந்தாவனம் செயல்படும்.

இத்தகைய நிலைப்பாட்டில் எந்தக் குறிப்பிட்ட அரசியல் கோட்பாடுகளுடனும் இனம் காணுவதை ப்ருந்தாவனம் தவிர்க்கிறது‘ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.