பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

283


தொடர்ந்து வருவதற்கான சாத்தியங்கள் எங்கள் முயற்சியில் உள்ளது; உங்கள் ஒத்துழைப்பில் உள்ளது’ ( சூத்ரதாரி ).

த்வனி

இந்தப் பெயரில் ஒரு இலக்கியப் பத்திரிகை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருவது. இலக்கிய ஆர்வமும், தரமாககனமாக—புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பும் பெற்றுள்ள இளைஞர்கள் கோவில்பட்டியிலிருந்து ’த்வனி’ யைப் பரப்பு முனைந்திருக்கிறார்கள்.

‘தமிழ் இலக்கியச் சூழல்—ஒரு ஆரம்ப விசாரணை என்றொரு கட்டுரை ( ஷைலேந்தர் எழுதியது. மே 1985 ) தற்கால நிலையைத் தீவிரமாக அலசி ஆராய்ந்திருக்கிறது.

‘இன்னமும் நாம் பழைய பாட்டையில் போய்க் கொண்டிருப்பதைப் பரிசீலிக்க வேண்டும். இப்போது நம்மால் செய்ய முடிந்ததும், செய்ய வேண்டியதும் என்ன ? க்ஷீண நிலையில் கிடக்கும் தமிழ்ப் பத்திரிகை உலகத்தை மீண்டும் தட்டியெழுப்பவேண்டும். மீண்டும் தரமுள்ள வாசகர்களைத் தமிழில் உருவாக்க வேண்டும். இப்போதிருக்கிற இந்தத் தேக்க நிலை புதிய பாய்ச்சலுக்கான பதுங்குதலாகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்கான ஆரோக்கியத்தை வளர்க்கவேண்டும். ஜனங்களின் ரசனைப் போக்கில் விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்து மெல்ல அவர்களை ரசனைக்குரியவர்களாக மாற்ற வேண்டும் என்கிற லட்சியத்துக்காக, விரிந்த அளவில் வாசகர்களிடத்தில் இயங்கிவரும் கலை இலக்கிய ஸ்தாபனங்களின் கைவசம் உள்ள பல ஆயிரம் வாசகர்களின் இருத்தலே நமக்கு இன்னமும் நம்பிக்கையூட்டுகிறது. நமக்கு நாமே நம்பிக்கை கொள்வதும் வாசகர்களை நம்பிக்கை கொள்ள வைப்பதும் அவசியமாகிறது.

முதலில் நம்முடைய குறுகிய குழுவாத மனப்பான்மைகளைச் சற்றே ஆரோக்கியமாக்க வேண்டும். யதார்த்த வாழ்வைச் சந்திக்காத நம்முடைய மண்டை வீக்கத்தைக் கரைக்க முயற்சி செய்யவேண்டும். எல்லாவித ஆக்கபூர்வமான மோதல்களையும், புதிய விளைவுகளையும், புணர்ச்சிகளையும் பல்கிப் பெருகிடச் செய்தல் வேண்டும். தனிநபர் வாதங்களில் மீண்டும் வீழ்ந்திடாமலிருக்க வேண்டும்.

இதெல்லாவற்றுக்கும் மேல் நம்மை நாமே திடப்படுத்திக் கொள்ள, சுயவிமர்சனப் பார்வையில் புரிந்துகொள்ளத் தைரியம் வேண்டும்’ (த்வனி)