பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

29


“கலாமோகினி—

இது லட்சியவாதிகளின் கனவு.

நீண்டநாள் தாமதத்திற்குப் பிறகு நனவாகியிருக்கிறது. இதன் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டுக் கலா ரசிகர்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.

முதல் இதழைத் தமிழ்நாட்டின் எழுத்தாள நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.”

இப்படி முதல் இதழ் 'க்ஷேமலாபங்கள்' பகுதியில் அதன் ஆசிரியரான வி. ரா. ராஜகோபாலன் எழுதியிருந்தார்.

கலாமோகினியின் முதலாவது இதழ் சித்ரபானு ஆனி 15 என்ற தேதியை (1942 ஜூலை 1) கொண்டிருந்தது. ஒவ்வொரு இதழும் தமிழ் வருடம், மாதம், தேதியைத்தான் தாங்கி வந்தது.

இது எழுத்தாளர்களின் பத்திரிகை என்பதைப் பல விஷயங்கள் நிரூபித்தன. முதல் இதழின் அட்டையில் ந. பிச்சமூர்த்தியின் உருவப் படம் வெளியாகியிருந்தது. தொடர்ந்து ஒவ்வொரு இதழும் ஒரு எழுத்தாளரின் படத்தையே அட்டைச் சித்திரமாகக் கொண்டிருந்தது. கடைசிவரை கலாமோகினி இந்த நியதியை அனுஷ்டித்தது குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம் ஆகும்.

அட்டையில் ஒரு எழுத்தாளரின் படத்தைப் பிரசுரித்து, இவர் நம் அதிதி என்று உள்ளே ஒரு பக்கம் அவரைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் வழக்கத்தை வி. ரா. ரா. மேற்கொண்டிருந்தார். அந்த எழுத்தாளரின் கதை அல்லது கட்டுரை அல்லது கவிதையை வாங்கி அதே இதழில் பிரசுரிப்பதும் அவர் வழக்கமாக இருந்தது.

இவ்வாறு எழுத்தாளர்களையும் இலக்கியத்தையும் பிடிவாதத்துடன் கவுரவித்த ஒரே பத்திரிகை கலாமோகினிதான். முதல் இதழின் அட்டையில் ஒரு படைப்பாளியின் படத்தை வெளியிட்டு, அந்த இதழை எழுத்தாளர்களுக்கு சமர்ப்பித்த முதல் தமிழ்ப் பத்திரிகையும் அதுவே.

கலாமோகினியின் முதல் இதழில் ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜ கோபாலன், சிட்டி, க. நா. சுப்ரமண்யம், சிதம்பர சுப்ரமணியன் முதலியவர்களது படைப்புகள் இடம் பெற்றிருந்தன்.

இந்த முதல் இதழே இலக்கியப் பிரியர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்து விட்டது. -

கலாமோகினி தனது பிறப்புக்கான காரணத்தையும், தன் நம்பிக்கை யையும் முதலாவது இதழிலேயே இவ்வாறு அறிவித்திருந்தது—