பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

வல்லிக்கண்ணன்


சமூகத் தாக்கமும், சமூகப் பொருத்தமும் இல்லாத எந்த ஒரு சமூகச் செயல்பாடும் பயனற்றது எனப் பழித்துரைக்கப்பட்டு காலத்தால் ஒதுக்கப்படும். மனித மேம்பாடு நோக்கிய செயல்பாட்டையே சமூகச் செயல்பாடு என்று குறிப்பிடுகிறோம். எழுத்துப் படைப்பாக்கமும் ஒரு சமூகச் செயல்பாடே. சமூக விழிப்புணர்வுக்காக இக்கலை அர்த்தமுள்ள பங்கை வலுவாக ஆற்ற முடியும்.

எழுத்துக்கலை கருத்துப் பரிமாற்றத்துக்கும், கருத்து வளர்ச்சிக்கும், சமுதாய உயர்வுக்கும் ஆற்றியுள்ள மகத்தான சாதனைகளை வரலாறு நமக்குக் காட்டுகிறது. இத்தகைய வலுவான கலை, தனிமனித லாபத்துக்காகவோ, தனிமனித மன நிறைவுக்காகவோ, தனிமனிதச் சிறப்புக்காகவோ, சிலரது லாப நோக்கங்களின் கருவியாகவோ பயன்படுத்தப்படுமானால், அதன் சமூகக் குணாதிசயம் பழுதாகி, எதிரான திசையில் எளிதில் இழுக்கப்பட்டு அழிவுக் கலாசாரத்தின் ‘எடுபிடி சக்தி‘ யாக மாறி சிறுமைப்பட்டுப் போகும்.

சமூக மேம்பாட்டில் அக்கறையுடைய எவரும் ‘மனித வாழ்க்கையை மனித வாழ்க்கையாக இவ்வுலகில் பராமரிக்க நடத்தப்படும் செயல்களே, இயக்கங்களே, போராட்டங்களே சரியானவை—தேவையானவை என்று கருதுவர். இந்தக் கோணத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புப் பணி எந்த அளவுக்கு உரிய சமூகச் செயல்பாடாக அமைந்து இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதில் ‘சோலை‘ அக்கறை காட்டுகிறது.

பெரும்பான்மையான எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக் கடமையை, எழுத்து தர்மத்தை அறவே மறந்து, பெரும்பான்மை மக்களைப் பற்றிய சிரத்தையே இல்லாமல், ஆட்டுவிக்கும் சீரழிவுக் கலாச்சார சக்திகளின் ஆடும் பாவைகளாய் செயல்பட்டு வரும் அலங்கோலத்தை ‘சோலை’ உணர்கிறது.

இந்நிலையில், கருத்துப் புரட்சிக்கு ஆதாரமாக— பெரும்பான்மை மக்களின், குறிப்பாக அடித்தட்டு மக்களின், வாழ்க்கை மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டிய மானுட மரியாதையை, உரிமையை, ஒவ்வொரு மனிதனும் சமூக சமத்துவ அடிப்படையில் அனுபவிக்கத் தேவையான சமூக விடுதலை நோக்கிய பயணத்தின் முன்னணியினராகத் திகழவேண்டிய எழுத்தாளர்களுக்கு அவர்களது பங்குப் பணியை நினைவூட்ட வேண்டிய முயற்சி சமூக மேம்பாட்டு இயக்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் எனக்கொண்டு ‘சோலை‘ செயல் புரிந்து வருகிறது.