பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

319


சமூக மேம்பாடு என்கிறபோது, அதன் பொருளாதார மேம்பாட்டை மட்டுமே கணக்கில் கொள்ளாது, சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குத் தேவையான ஒருமைப்பாட்டு உறவுணர்ச்சிகள், கலை நாகரிக எழுச்சிகள், மனோகாய ஆரோக்கிய வளர்ச்சிகள் ஆகிய அனைத்தின் மொத்தத்தையும் கொண்டு ஒரு முழுமையான சமூக மேம்பாடே குறிக்கப் படுகிறது.

இந் நோக்கிலான விஷயங்களை பாரதி சோலை வெளியிடுகிறது. கதைகள், கவிதைகளோடு சிந்திக்கத் தூண்டுகிற கட்டுரைகளை அதிகமாகப் பிரசுரிக்கிறது. புதிய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கும் கட்டுரைகள், பொருளாதாரக் கட்டுரைகள் இதில் இடம் பெறுகின்றன. மற்றும் உணவு வகையின் குணங்கள், மூலிகைகள், குழந்தை நலம், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு பற்றிய கட்டுரைகளையும் தருகிறது.

‘லாபமே குறிக்கோள் எனக் கொண்ட பொருள் உற்பத்தியும் வாணிபமும் பெரும்பான்மை நாடுகளின் சமூக வாழ்க்கையையே மாசுபடுத்திவிட்டன. இத்தகைய வாணிபத்தை வளர்ப்பதற்கு உருவானதே காலனி ஆட்சிகள். இன்று, காலனி ஆட்சிகள் கரைந்துவிட்டன; எஞ்சியிருப்பதும் கரைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது விதைத்த கொடிய கலாச்சாரம் இன்றும் ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கலாசாரத்தின் ஆதிக்கம் முற்றிலும் நீங்கினாலொழிய எளியநாடுகளின் மேம்பாட்டிற்கு வழியே இல்லை. இது குறித்துச் சிந்திப்பதும் செயல்படுவதும் இந்தத் தலைமுறையில் வாழும் ஒவ்வொரு அறிவுஜீவியின் தலையாய பொறுப்பாகும் என்று பாரதி சோலை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.