பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55. தீபம்


‘பரிசுத்தமான எண்ணங்களுடனும் தணியாத சத்திய வேட்கையுடனும் எல்லா இடங்களிலும் அறிவின் பிரகாசமும் உண்மையின் ஒளியும் துலங்க வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்துடனும் இன்று இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நான் ஓர் இலக்கியத் தீபத்தை பக்தி சிரத்தையோடு ஏற்றி வைக்கிறேன். இதன் பிரகாசத்தில் பகைமை, போட்டி, பொறாமை, இலக்கிய மாரீசம், நாட்டைக் கெடுக்கும் நச்சு இலக்கியப் புல்லுருவிகள் ஆகிய விதவிதமான இருள்களெல்லாம் அகன்று விலகி ஓடுமாக! தீபம் நல்லவர்களாகிய எல்லார்க்கும் ஒளியாகவும் தீயவர்களாகிய எல்லார்க்கும் சுடு நெருப்பாகவும் இருக்கும்; அப்படித்தான் இருக்கவேண்டும்.

இதன் குணம் பிரகாசம் என்பது மட்டும்தான் இங்கு நமக்குத் தேவையான உண்மை. எனவே அதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.’

இவ்வாறு அறிவித்து நா. பார்த்தசாரதி 1965 ஏப்ரல் மாதம் ‘தீபம்‘ மாத இதழைத் துவக்கினார்.

‘இது இலட்சக்கணக்கில் பணம் முடக்கும் ஓர் காகித வியாபாரி நடத்த முன்வரும் இச்சை பச்சை நிறைந்த கவர்ச்சிப் பத்திரிகை அல்ல. தன்மானமும், நேர்மையும் இருகரங்களென நம்பும் ஓர் அசல் எழுத்தாளரின் ஆத்ம சோதனைதான் இந்தப் பத்திரிகை என்றும் முதல் இதழின் தலையங்கம் தெரிவித்தது.

‘தீபம்’ ஆசிரியர் மேலும் தெளிவாகக் கூறியிருக்கிறார் : மனோதர்மமும் தன்னம்பிக்கையுமே எனது பலமான மூலதனங்கள். ஒரு காகித வியாபாரி பத்திரிகை தொடங்கும் போது அவர் விற்கும் காகிதத்தைப் போலவே மற்றொரு வர்ணக் காகிதமாகிய பணமும் அதிகாரமுமே அதற்கு மூலதனமாகலாம். ஆனால் ஓர் எழுத்தாளன் பத்திரிகை தொடங்கும்போதோ பணத்தைவிட மனோதர்மமே பெரிய மூலதனமாக அமைய முடியும். அப்படித்தான் நானும் அமைத்துக் கொண்டிருக்கிறேன் இப்போது.‘

ஆசிரியரின் மனோதர்மம், தன்னம்பிக்கை ஆகிய பலமான மூலதனங்களின் அஸ்திவாரத்தில் தீபம் தரமான இலக்கிய ஏடு ஆக வளர்ந்து வந்திருக்கிறது. அதன் இருபதாம் ஆண்டு நிறைவு விழா 1985-ல் சென்னையில் நல்ல முறையில் கொண்டாடப்பட்டது.

ஆரம்பம் முதலே நல்ல இலக்கியத்தின் வளர்ச்சியிலும் வளத்திலும் தீபம் அக்கறை கொண்டு, இலக்கியவாதிகளையும் இலக்கியப் படைப்புகளையும் பிரகாசப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

‘இலக்கியச் சந்திப்புகள் மூலம் பெயர் பெற்ற எழுத்தாளர்களின் எண்ணங்களை இலக்கிய ரசிகர்கள் அறிந்து கொள்வதற்கு வகை