பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

வல்லிக்கண்ணன்


‘சக்தி பிரசுராலயம்' வை. கோவிந்தன் பிரசுரத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் பெரும் சாதனைகள் புரிந்துகொண்டிருந்தார். அறிவுக்கு விருந்தாகும் நல்ல நூல்களை அழகான முறையில் வெளியிடுவதில் அவர் ஆர்வம் காட்டினார்.

வை. கோவிந்தன் பல வருட காலம் நடத்திய 'சக்தி' என்ற மாசிகை தமிழில் ஒரு வித்தியாசமான பத்திரிகையாகத் திகழ்ந்தது. ஆரம்பத்தில், 'டைம்' பத்திரிகை அளவிலும் அமைப்பிலும் அது வந்து கொண்டிருந்தது. பிறகு புத்தக வடிவம் பெற்றது. கனத்த அட்டையுடன், அழகிய தோற்றப் பொலிவுடன், நல்ல வெள்ளைத் தாளில் அருமையான அச்சில் வந்த 'சக்தி' ஒரு சில கதைகள், ஒன்றிரண்டு கவிதைகளோடு, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பாணியில் பலசுவைக் கட்டுரைகளையும், அறிவுக்கு விருந்தாகும் விஷயங்களையும், சுவாரஸ்யமான துணுக்குகளையும் சேகரித்து வழங்கியது. வெகு காலம்வரை தி. ஜ. ர. (தி. ஜ. ரங்கநாதன்) அதன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். அவருக்குப் பிறகு சுப. நாராயணன் என்ற ஆற்றலும் சிந்தனைத் திறமும் மிகுதியாகப் பெற்றிருந்த எழுத்தாளர் அதன் ஆசிரியராகச் செயலாற்றினார். சில வருடங்களுக்குப் பின்னர் கு. அழகிரிசாமியும் தொ. மு. சி. ரகுநாதனும் பொறுப்பேற்று ‘சக்தி' பத்திரிகையை உருவாக்கி வந்தனர்.

காலப்போக்கில், 'சக்தி' என்ற நல்ல மாதப் பத்திரிகை நிறுத்தப் பட்டது. 'சக்தி மலர்’ என்ற பெயருடன், கதைகள்- கட்டுரைகள்கவிதைகள் நிறைந்த 'மாதம் ஒரு புத்தகம்' அழகிரிசாமி ரகுநாதன் தயாரிப்பாக ஒரு வருடம் வெளியிடப் பெற்றது. இறுதியில் 'சக்தி பிரசுராலயம்' என்ற நல்ல புத்தக வெளியிட்டு நிறுவனமே செயலற்றுப் போயிற்று.

இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்திலும் அதற்குப் பிந்திய சில வருடங்களிலும் (1940 களின் முற்பகுதியில்) புதிய பத்திரிகைகள் துவங்கி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நெருக்கடி நிலையை மீறிச் சமாளிக்கும் விதத்தில் ஏ. கே. செட்டியார் ஒரு வழி கண்டுபிடித்தார். பத்திரிகை போலவும்- ஆனால் முறையான ஒரு பத்திரிகையாக இல்லாமல் புத்தகம் போலவும், ஆயினும் நேரான ஒரு புத்தகமாக அமையாது-'மாத வெளியீடு' ஆக ஒரு மலர் பிரகரிக்கலாம் என்று கண்டு, 'குமரி மலர்’ என்ற மாதம் ஒரு புத்தக வெளியீட்டை ஆரம்பித்தார்.