230
தமிழ்க் காதல்
தலைவியின் ஊடலுக்குக் காரணம் வேண்டும் என்பதற்காக இப்பரத்தையிற் பிரிவு அமைந்தது என்பது அத்துணைச் சிறந்த காரணமாகத் தோற்றவில்லை என்று உடன்படுவர் டாக்டர் உ.வே.சா.[1]
பண்பில் கருத்துக்கள்
ஐந்திணைக்கண் பரத்தை இடம் பெற்றது பற்றி இன்னும் சில கருத்துரைகள் உள. நாள்தோறும் பால் குடிப்பவன் அதன் இனிமையை அறியான். புளிக்கும் காடியை இடையே ஒருகால் அருந்துவானாயின், பாலின் இன்சுவை அவனுக்கு விளங்கும் நிழலருமை வெயிலில் சென்றாற்றானே தெரியவரும். அதுபோல் கற்புடையாளின் துாய பேரின்பத்தைக் கண்டறிதற்காகத் தலைவன் வரைவில் மகளிரைச் சார்ந்து திரிவான் என்பது ஒரு கருத்து. புறமகளிர் ஆடியும் பாடியும் அழைக்கும்போது அன்னவர் காதலைத் தலைவன் மறுக்கான். ஏன்? அவன் எல்லோர்க்கும் தலைவன், காதலிப்பார்க்கெல்லாம் காதலன் என்பது ஒரு கருத்து. ஒரு தலைமகள் மணப்பதற்கு முன்னேயே, தலைவனுக்குப் பரத்தையர் உண்டு; அப் பரத்தையர் யாரெனின் அவனுக்கென்று அவனது. பெற்றோர்களால் வகுத்து வளர்க்கப்பட்டவர். குரவர் பணியைக் கொள்ளுதல் கடன் என்ற நன்னோக்கத்தால்தலைவன் அப் புறம்களிர்களை நயப்பான், காதலாடுவான் என்பதும் ஒரு கருத்து. தன் மனைவியின் இன்பத்தோடு ஒப்பிட்டுக் காணவும், தான் எல்லார்க்கும் தலைவன் என்பதைக் காட்டவும், பெற்றோர் பணிக்கு அஞ்சியும், ஆடவநம்பி, பரத்தையிற் பிரிவை அறிவோடு மேற்கொள்வானே யன்றி, கேண்மின்! தனக்கின்பம் வேண்டிப் பிரியானாம்; காம ஆசை துரப்பச் செல்லானாம். சுருங்கச் சொல்லின், இவ்விளக்கங்கள் பண்பற்றவை. அறிவுக் குறும்புடையவை. தன் மகனுக்குப் பெற்றோர்களே பரத்தை மார்களைப் போற்றி வளர்த்து உடைமையாக அளிப்பர் என்று, இல்லாத பொல்லாத கருத்தை எப்படி எழுதத் துணிந்தார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்? தமிழில் கருத்துக்களை உயர்ந்த தமிழ்நடையில் எழுதி மருட்டும் உரை துரல் அது. இவ்விளக்கங்களை நம்பின், பரத்தையொழுக்கம் ஆடவனுக்கு நல்லது, இன்றியமையாதது, சிறந்தது என்று பொருளாகாதா?
சமுதாயக் கருத்து
மேற்காட்டிய கருத்துரைகள் ஒருபால் நிற்க, ஐந்திணை
இலக்கியத்தில் பரத்தைக்கு ஒர் இடம் வகுத்தளித்தற்கு நேரிய காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். ஏய்த்து மழுப்புவதுபோல்
- ↑ 1. குறுந்தொகை: நூலாராய்ச்சி. ப. 79