240
தமிழ்க் காதல்
தமிழகத்திற் பரத்தமை உண்டு; அவ்வழிப்பட்ட கணவனைப் பொறுத்து ஏற்கும் மனைவிமையும் உண்டு. இது சமுதாயத்தின் இயல்பு வழக்கு. இவ்வழக்கினால் உள்ளப் புணர்ச்சி ஒடியாது காக்கப்படுகின்றது. அகத்திணைக்கண் பரத்தையிற் பிரிவு இடங் கொண்டதற்கு இவ்வழக்கே காரணமாம். பெண்ணின் கற்பினைக் காட்டும் சான்றாக வேண்டுமென்று நாட்டிற் பரத்தமை நிகழ்வதில்லை. பரத்தமை நிகழ்வை ஆற்றவும் பொறுத்துத்தான் பெண் தன் கற்புடைமையைப் புலப்படுத்த வேண்டும் என்பதில்லை. அதுபோல் இவள் ஊடலுக்காக அவன் புறம்போவதும்; அவனது புறப்போக்கை வைத்துத்தான் இல்லவள் ஊடுவதும் இல. எல்லாம் தனித்தனி இயல்புகள்; சமுதாய நடக்கைகள். கப்பல் ஒட்டவோ கடல்கிடப்பது? பயிர்தழைக்கவோ மழை பெய்வது? பரத்தமை பொறுக்கவோ கற்பாயிருப்பது?
XVI
ஒருமைக் கணவர்கள்
அகத்திணைப் பொன்னைச் சமுதாய உரைகல்லில் உராய்வோமாயின், பரத்தையிற் பிரிவும் ஒளிகுன்றாது இயல்பென விளங்கும் என்று பல்லாற்றானும் கண்டோம். எனினும் அகத்திணையைப் படைத்த பெருமக்களோடு ஒரு கருத்து முரண் எனக்கு உண்டு. அகத்திணைக்கண் பரத்தமையைக் கூறியது ஒக்கும். அதனை ஐந்திணைக்கண் கூறியது ஒக்குமா? மனைவியை யன்றி யாரையும் நினையாத நிறையுடைக் கணவன் மார் இல்லாமலில்லை. ஒருமை நங்கையர் போல ஒருமை நம்பியர் பலர் உளர்.
தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே (புறம். 73)
என்று ஒழுக்க வஞ்சினம் சாற்றினான் சோழன் நலங்கிள்ளி, "இகழ்ந்த பகைவரை வெல்லேனாயின், என் மாலை பரத்தை மார்பில் தோய்க என்று உயிரினும் சிறந்த ஒழுக்கத்தைப் பணயம் வைத்தான். "சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக” (புறம், 17) என்று பூதப்பாண்டியன் தன் ஒருமைக் காதலைச் சூளுரைத்துப் போர்க்குப் புறப்பட்டான். தலைவன் பிரிந்த ஞான்று வேட்கையை அடக்கி ஆற்றியிருக்கின்றாள் ஒரு தலைவி. அது அகத்திணை. அடங்காது ஆற்றியிராது நானுக் கடந்து ஊரறியப் புலம்புகின்றாள் ஒரு தலைவி. இதுவும் அகத்திணை. எனினும் ஆற்றியிருக்கும் தலைவி ஐந்திணை யாவாள். தேறுதல் ஒழிந்த தலைவி பெருந்திணையாவாள் என்று உட்பிரிவில் திணை வேறுபாடு எய்தக் காண்கின்றோம். இன்ன