பக்கம்:தமிழ்க் காதல்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் கல்வி

375



நோயலைக் கலங்கிய மதனழி பொழுதிற்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே,

பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி (நற். 94)

ஆடவன் தன் காமத்தை வெளிப்படச் சொல்வான். நங்கை அதனை நாணத்தாற் புலப்படுத்தலும் மாட்டாள் என்ற ஆண் பெண் இயல்புகளை மேலையடிகள் உணர்த்துவன. பாங்கனுக்குத் தலைவன் உற்றது உரைக்கும் துறைகளாலும், தோழிக்கும் அன்னைக்கும் ஊர்க்கும் தலைவி உற்றதைப் பலவாறு மறைக்கும் துறைகளாலும், அவரவர் இயல்புகளை நன்கு அறிந்து கொள்கின்றோம். எனினும் இவ்வியல்புகள் பொதுப்பட்டவை. சிறப்பியல்பு கொண்ட ஆடவரும் பெண்டிரும் இருப்பர். அதனை உரியவர் புரிந்துகொள்ளல் வேண்டும். தலைவன் தன் உள்ளுணர்வை வெளிப்படுத்த மாட்டாது விழுங்கினான்,புழுங்கினான், வெறுமனே திரும்பினான் என்று நாணுடைமை காட்டும் அகப்பாடல்களும் உள.

காலை வந்து மாலைப் பொழுதின்
நல்லகம் நயந்துதான் உயங்கிச்

சொல்லவு மாகாது அஃகியோனே (குறுந் 346)

என்று ஒரு தலைவனது நாண் நிலையைப் பாடுவர் வாயில் இளங்கண்ணனார். குவளை மாலை தருகின்றான், கிளி ஒட்டி உதவி செய்கின்றான், காலையில் வந்து மாலைவரை இருந்து திரும்பு கின்றான், ஒன்றும் தன் வாய்விட்டுச் சொல்கின்றான் அல்லன் என்று, தலைவனது சொல்லாக் குறிப்பைத் தலைவிக்கு அறிவிக்கின்றாள் தோழி. பொதுவியல்புக்கு வேறாகக் காமத்தை வெளிப்பட மொழியும் நன்மாந்தர்களும் உளர். இன்ன மொழிவு சூழ்நிலையையும் கேட்பாரையும் பொறுத்தது. - -

கொன்றோர் அன்ன கொடுமையோ டின்றே
யாமம் கொளவரிற் கனை.இக் காமம் -

கடலினும் உரைஇக் கரைபொழி யும்மே (அகம். 128)

என்பது கபிலர் பாடிய ஒரு களவு மகளின் காமப் பேருரை. நடுயாமத்துத் தன் காமவுணர்வு கடலினும் பரந்து கரைகடந்து செல்லுகின்றது என்று தோழிக்குப் புலப்படுத்துகின்றாள் தலைவி. பாலுணர்வை வெளிப்படுத்தும் வழிகள் ஆள்தோறும் வேறுபடுதலின், காதலர்கள் ஒருவர் நிலையை மற்றவர் விளங்கி இன்புறுதல் முறையாகும்.

அகத்திணைத் தலைமை

காதலன் காதலி இருவரும் தலைவன் தலைவி என்று பெயர் பெற்றாலும், அகத்தலைமை பெண்ணுக்கே உரியது. புறத்தலைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/388&oldid=1395012" இலிருந்து மீள்விக்கப்பட்டது