58
தமிழ்க் காதல்
எவன்கொல் வாழி தோழி மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வருஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானம் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே (அகம். 128) எனத் தலைமகன் கேட்குமாறு தோழிக்குச் சொல்வது போலத் தலைவி தன் அச்சத்தைப் புலப்படுத்துகின்றாள். இரவுக்குறி வந்த தலைமகனை, வழி கொடியது. உன் உயிர்க்கு ஊறுவந்தால் இவளுயிர் என்னாகும்? இனி இரவில் வருவதைத் தவிர்க, பழங்கள் தொங்கும் காந்தட் சோலையில் பகல் நீ வரினும் புணரலாம் (அகம். 18), என்று கூறுவதும், பகல் வந்தொழுகும் தலைமகனை, 'பெருங்களிறு புலியொடு பொருது வலி சோரும் மலைச்சாரலில் நடுயாமத்து வருக, ஏதத்துக்கு நானோம் (குறு:88)என்று கூறுவதும், 'நீ பகல் வரின் ஊரார் அலருக்கு அஞ்சுகின்றோம்; இரவு வரின் புலிக்கு அஞ்சுகின்றோம். ஆதலின் இரவும் பகலும் வராதே" (அகம்.18) என்று கூறுவதும், அடிக்கடி இவ்விடம் வருக, அவ்விடம் வருக என இடமாற்றி உரைப்பதும் எல்லாம், பார்வைக்குத் தலைவனை அலையவைத்து அலைக்கழிவு செய்வதுபோல் தோன்றினும், அவன் நாள் நீடிக்காமல் தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதே பொறுப்புடைய தோழியின் உட்கிடையாகும். தோழியின் செய்கையெல்லாம் வரைதல் வேட்கைப் பொருள (தொல். 1155) என்று தொல்காப்பியம் எடுத்துக் காட்டுதல் காண்க, காதலர்கள் அன்புடையவர் களாயினும், களவு என்பது எப்படியும் களவுதானே. அதற்குரிய அச்சமும் இடையூறும் சூழ்நிலையும் வெளிப்பட மணந்தாலன்றி எங்ங்னம் ஒழியும்? இதனை அறிவுடைத் தலைவன் அறியாதானல்லன். மணமே மறைவுக்கு முடிவு என அவன் அறிந்திருந்தும், அச்சநிலையில், களவு தரும் பேரின்பம் கருதி, அதனில் சின்னாள் நீடித்தொழுக விரும்புவான். எனினும் தோழியின் முடுக்கும் வேறுபல இடையூறுகளும் விரைந்து மணக்குமாறு தலைவனைத்துாண்டும். சங்கப் பெரும்புலவர் பரணர் களவு நெறிக்கு வரும் முட்டுப்பாடுகளை யெல்லாம் அடுக்கி, ஒரு பாட்டில் (அகம்.122) சொல்லுவர். இப்பாட்டு அவல்ச் சுவைக்குப் பேரிலக்கியம். நாள்தோறும் எதிர்பார்த்திருந்த கூட்டம் நாள்தோறும் வந்த புதிய இடைஞ்சலால் நடவாமாற் போயிற்று