தமிழ்ப்பழமொழிகள்
107
ஆவுடையாரையும் லிங்கத்தையும் ஆறு கொண்டு போகச்சே சுற்றுக் கோயில் சுவாமி எல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுகின்றனவாம். 2460
ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்.
ஆவென்று போனபின் அள்ளி இடுவது ஆர்?
ஆ வேறு நிறம் ஆனாலும் பால் வேறு நிறம் ஆகுமா?
ஆழ்வார் சாதித்தது ஆயிரம்; அம்மையார் சாதித்தது பதினாயிரம்.
- (ஆழ்வார், நம்மாழ்வார்.)
ஆழ்வாரே போதாதோ? அடியாரும் வேண்டுமோ? 2465
- (ஐயங்காரும் வேண்டுமோ?)
ஆழ அமுக்கினாலும் நாழி நானாழி கொள்ளாது.
ஆழ உழுதால் ஆட்டுரத்துக்கும் அதிகம்.
ஆழ உழுதாலும் அடுக்க உழு.
ஆழ உழுது அரும் பாடு பட்டாலும் பூமி விளைவது புண்ணியவான்களுக்கே.
ஆழங்கால் சேற்றில் அழுந்தியிருக்கிறான். 2470
ஆழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டார்கள்.
ஆழம் அறியாமல் காலை விட்டுக் கொண்டேன்; அண்ணாமலை அப்பா காலை விடு.
- (+ என்ற கதை)
ஆழம் அறியாமல் காலை விடாதே.
- (இடாதே.)
ஆழம் அறியும் ஓங்கில்; மேளம் அறியும் அரவம்.
- (ஓங்கில்-ஒரு வகை மீன்.)
ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டது போல. 2475
ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம்.
ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பைப் பார்.
- (மூழாக்கு-மூன்று ஆழாக்கு.)
ஆழாக்கு அரிசி வாங்கி ஐந்து கடை மீனை வாங்கிப் பொல்லாத புருஷனுக்குப் போட நேரம் இல்லை.
ஆழி எல்லாம் வயல் ஆனால் என்ன? அவனி எல்லாம் அன்னமயம் ஆனால் என்ன?