பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. பத்துப்பாட்டு

முன்னுரை

ஐங்குறுநூறு குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய தொகை நூல்கள் அகவற்பாவில் அமைந்தவை. அவ்வாறே புறநானூற்றுப் பாடல்களும் அகவற்பாவில் அமைந்தவையே. அகநானூற்றுப் பாடல்கள் 13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையும் உடையவை. புறநானூற்றில் 40 அடிப் பெருமையுள்ள பாடலும் (395) இடம் பெற்றுள்ளது. பதிற்றுப்பத்தில் 57 அடிகளைக் கொண்ட பாடலும் (90) இடம் பெற்றுள்ளது. ஆயின், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட அகவற்பாக்களும் உண்டு. அத்தகைய நீண்ட பாடல்கள் பத்தின் தொகுதியே பத்துப்பாட்டு எனப்படும்.

பத்துப்பாட்டு என்பவை-திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை. பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகும். இப்பத்தும் முறையே 317, 248, 269, 500, 1035 782, 188, 261, 301, 583 அடிகளைக் கொண்டவை. இவற்றுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு (103 அடி); மிகப் பெரியது மதுரைக் காஞ்சி (782 அடி) .

பத்துப்பாட்டின் காலம்

(1) திருமுருகாற்றுப்படை நக்கீரர் என்பவரால் முருகப் பெருமானைப் பற்றிப் பாடப்பட்டது: (2) முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் கரிகாற் சோழன் மீது பொருநர் ஆற்றுப் படையைப் பாடினார். (3) கடியலூர் உருத்திரன்