பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்கள் இயல்பு. அங்ஙனம் மக்கள் ஒன்றுகூடி வாழ்ந்தால் தான் பொருள் உணர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் உண்டாகும். மக்கள் தம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும். பிறர்க்கு எடுத்துக்காட்ட விழைதல் இயல்பாகும். இங்ஙனம் எடுத்துக்காட்டி, கேட்பவர் அவற்றை அறியும் பொழுது, தம்மைப் போலவே எண்ணி மகிழ்வதைப் பார்ப்பதில் சிறந்த இன்பம் தோன்றுகிறதன்றோ! இவ்வாறு மக்கள் தம்மை வெளிப்படுத்துவதற்கு விரும்பும் விருப்பமிகுதி இலக்கியத் தோற்றத்திற்கு ஒரு காரணமாகும். இம்முறையில் எழுந்தவையே அகப்பொருள், புறப்பொருள் பற்றிய பாடல்கள் எனலாம்.[1]

மக்கள் தம் கருத்துகளைப் பிறருக்கு எடுத்துக் கூறுவதோடு, பிறர் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அறிந்து கொள்வதில் விருப்பம் காட்டுகின்றனர்; அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கண்டு இன்புறுகின்றனர் அல்லது துன்புறுகின்றனர்; அவற்றைப் பிறருக்கு எடுத்துக்கூறி அவற்றின் படிப்பினையை உணர்த்துகின்றனர். இவற்றால் அவர்க்குத் தம்மை யொழிந்த பிறரிடத்துள்ள பற்றுக்கோடு நன்கு புலனாகும். இந்தப் பற்றுக்கோடே சிலப்பதிகாரம் முதலிய பெருங்காவியங்கள் எழுதக் காரணமாய் அமைந்தது. முற்றும் துறந்த இளங்கோ அடிகள் இப்பற்றின் காரணமாகவே சிலப்பதிகாரத்தை யாத்தனர் என்பது,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதுஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை யுருத்துவக் தூட்டுமென் பதுஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
காட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்.”


  1. 3. செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 1, பக். 70, 73