பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6



அடுத்து, வெளியில் எவரிடமும் கிடைக்காத-மிகப் பழைய பதிப்புக்களாக உள்ள சில நிகண்டுகளும் அகராதிகளும் புதுவை அரசின் பொது நூல் நிலையத்திலும், புதுவை பிரெஞ்சு கலைக் கழகத்திலும் (French Institute) கிடைத்தன. அவை யனைத்தும் பெறலருங் கருவூலப் பெட்டகங்கள். இவையே யன்றி, இன்னும் சில விடங்களிலிருந்தும் சில நூற்கள் பெற்றேன்.

இவ்வளவுக்கும், போதிய உடல்கலம் இல்லாதிருந்த நான், வேறெங்கும் செல்லாமல், கொண்டி மாந்தோப்பு காவல் காப்பதுபோல் புதுச்சேரியில் இருந்தபடியே நிகண்டுகளும் அகராதிகளும் தேடி ஆராய்ந்துகொண்டிருந்தேன். இன்னும், சென்னை நூல் நிலையங்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தஞ்சை சரசுவதி மகால் முதலிய இடங்கட்குச் சென்று தேடியிருந்தால் இன்னும் என்னென்னவோ கிடைத்தாலும் கிடைத்திருக்கலாம். அது செய்யாதது என் குறைபாடுதான். அக்குறைக்குக் காரணம் என் உடல் நலக் குறைவே.

இப்படியாகச் சொற்பொழிவிற்காகத் திரட்டிய குறிப்புக்கள் மலையாக வளர்ந்துவிட்டன. கூட்டத்தில் இரண்டரை மணி நேரம் தொடர்ந்து பேசியும் பத்தில் ஒரு பங்கும் தீர்ந்தபாடில்லை. எனவே, பாடுபட்டுத் தேடிய குறிப்புக்களைப் பாழாக்கக் கூடாது என்று கருதி இந்நூல் வடிவத்தில் எழுதி யமைத்து விட்டேன். எனவே, இந்நூல் தோன்றியதற்குக் காரணம் உயர்திரு. தேசிகப் பிள்ளையவர்களே.

பல்லாயிரம் நிகண்டுகள்

வட மொழியில் உள்ளாங்கு தமிழிலும் எண்ணற்ற நிகண்டுகள் தோன்றின. இதனை,