பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/146

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

142



நிகண்டு துணைபுரியும். கழகம் என்னும் சொல்லுக்குத் திவாகரத்தில் கிடைக்கும் விளக்கம் வருமாறு:—

[கழகம் என்னும் பெயர்]

“செல்லல் தீய்க்கும் பல்புகழ்ச் சேந்தனில்
வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்,
மல்லும், சூதும், படையும், மற்றும்
கல்வி பயில் களமும் கழகம் ஆகும்.”

‘சேந்தனைப் போல் கல்வியறிவிற் சிறந்த நாவலர்கள் கூடும் இடமும், மற்போர் பயிலும் இடமும், சூது ஆடும் இடமும், படைப்பயிற்சி பெறும் இடமும்’, கல்வி கற்கும் இடமும் கழகம் எனப் பெயர் பெறும்’—என்பது மேலுள்ள திவாகர நூற்பாவின் கருத்தாகும். ‘பலர் கூடும் இடம்’ என்னும் பொது அடிப்படையிலேயே, மேற்கூறப்பட்டுள்ள இடங்கட்குக் கழகம் என்னும் பெயர் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. திவாகரத்தில், கழகம் என்னும் பெயர் உடையனவாக ஐந்திடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதலும் கடையுமோ, ‘வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்—கல்வி பயில் களமும் கழகம் ஆகும்—என முழு முழு வரியில் கூறப்பட்டு முக்கியம் பெற்றுள்ளன; ஏனைய மூன்றுமோ, அதுவும் இதுவும் உதுவும் என்ற ஏனோ தானோ முறையில்— ‘மல்லும் சூதும் படையும்’ என ஒற்றை வரியில் ஓட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றன் தகுதிபற்றி ஆசிரியரின் உள்ளத்தில் இருந்த மதிப்பீடுகள் பாட்டாக வெளிவரும்போது அதற்குரிய உருவம் பெற்றுவிட்டன. இலக்கியத் திறனாய்வுக் கலைஞர்களும் உளநூல் வல்லுநர்களும் இதனை எளிதில் உணர்வர் இதிலிருந்து உணர வேண்டியதாவது:—