பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/148

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

144



பணம் வைத்துப் பந்தயம் கட்டி ஆடியிருப்பர். இப்படியாகச் சில இடங்களில் அறிவியல் ஈடுபாட்டினும் சூதாட்டமே முதலிடம் பெற்றுவிட்டிருக்கலாம். நாளடைவில் சில அறிவியல் மன்றங்கள் கலைக்கப்பட்டு, முழுக்க முழுக்கச் சூதாடும் களமாகவே மாறி விட்டிருக்கலாம். இன்றைய உலகில் இத்தகைய நிலையைச் சில இடங்களில் காணக்கூடும்— ஆனால், நிலைமை மாறியும், கழகம் என்னும் அந்தப் பெயர் மட்டும் அப்படியே ஆணியடித்துக் கொண்டு நிலைத்துவிட்டிருக்கவேண்டும். அதனால்தான் “கழகத்தியலும் கவற்றின் நிலையும்” எனப் புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூற்களில் ஆளப்பட்டிருப்பதல்லாமல், திருவள்ளுவரின் திருக்குறளிலும் சூதாடும் இடம் எனக் கழகம் சுட்டப்பட்டுள்ளது. இந்தத் திருக்குறள் ஆட்சியைக்கொண்டு, கழகம் என்னும் சொல், சூதாடும் இடத்தை மட்டுந்தான் அக்காலத்தில் குறித்து வந்தது என்று முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது. ஓர் இலக்கியக் கழகத்தைப் பற்றிப் பேசும்போது கழகம்–கழகம் என்றால் அது அந்த இலக்கியக் கழகத்தைக் குறிக்கும். ஓர் அரசியல் கட்சிக் கழகத்தைப் பற்றிப் பேசும்போது கழகம்—கழகம் என்றால் அது அந்த அரசியல் கட்சியைக் குறிக்கும். இது இக்கால உலகியல். இது போலவே, திருவள்ளுவர் திருக்குறளில் சூது என்பதைப் பற்றிப் பேசும்போது கழகம்–கழகம் என்றால் அது சூதாடும் இடத்தைக் குறிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்? நாளடைவில் சூதாடுங்கழகங்கள் திருவள்ளுவர் போன்ற அறிஞர் பெருமக்களால் இழித்துக் கண்டிக்கப்பட்டமையாலும், அதனால் மக்களால் புறக்கணிக்கப்பட்டமையாலும், சூதாடும் இடங்களைக் கழகம் என அழைக்கும்