பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


எய்ப்பினில் வைப்பு

இவற்றை யெல்லாம் வைத்து ஆராய்ந்து கொண்டிருந்த காலை, உயர்திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள் உரிச்சொல் நிகண்டைப் பற்றிச் சொல்ல வந்த [1]ஓரிடத்தில், ‘கி.பி. 1840-இல் புதுவை குவெர்னமா அச்சுக்கூடத்தில் துத்தன் துரை என்பவர் உரிச்சொல் நிகண்டைப் பதிப்பித்திருக்கிறார்; அதில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்று அறியக்கூடவில்லை’ என்று எழுதியிருப்பதைக் கண்ணுற்றேன்.

உரிச்சொல் நிகண்டு புதுச்சேரியில் பதிப்பிக்கப் பெற்றிருக்கிறது என்றால் எப்படியும் அப்பதிப்பின் ஒரு படியாவது கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் புதுச்சேரி வட்டாரத்தில் பலரை வினவிப் பலவிடங்களிலும் ‘சல்லடை போட்டுச் சலித்துத்’ தேடிப் பார்த்தேன். எங்கெங்கோ இருக்கலாம். ஆனால், நான் வினவிய–தேடிய இடங்களில் கிடைக்கவேயில்லை. சோர்ந்து போனேன். இந்நிலையில் ஒரு நாள் தற்செயலாக, காலஞ் சென்ற புதுவை மகாவித்துவான் பு. அ. பெரியசாமி பிள்ளையவர்களின் பேரன் முறையான திரு. சு. சோமு ஆசிரியர் அவர்கள், ‘வீட்டில் ஒரு நிகண்டு இருக்கிறது; பார்வையிடுகிறீர்களா?’ என்று என்னிடம் கூறினார்கள். உடனே அதை அவரிடமிருந்து பெற்றுப் பார்வையிட்டேன். நான் அவரை ஒரு நாளும் கேட்காதிருக்கவும், எய்ப்பினில் வைப்பென எதிர்பாராது எனக்குக் கிடைத்த அது, நான் எதிர்பார்த்துத் தேடிக்கொண்டிருந்த உரிச் சொல் நிகண்டின் புதுவைப் பதிப்பேதான்! இப்பதிப்பு குறித்து இந்நூலின் மூன்றாம் பாகத்தில் மிகவிரிவாகக் காணலாம்.


  1. அரும்பொருள் விளக்க நிகண்டுப் பதிப்பின் முன்னுரை–பக்கம் : 7.