சுந்தர சண்முகனார் 113
“நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது" (419)
என்னும் குறளால் அறியலாம். இதற்கு எதிர்மாறாக, அனுமன் நுணங்கிய கேள்வியன் ஆதலின் வணங்கிய வாயுடன் பேசினான். இந்தக் குறள் கருத்தை உள்ளத்தில் கொண்டு கம்பர் இந்தப் பாடலை வடித்துள்ள நயம் சுவையானது.
அகமும் முகமும்
அனுமன் கூறுகிறான்: ஐயனே! யான் வீடணனை நம்புகிறேன் - அவனை ஏற்றுக் கொள்ளலாம் என்பது அடியேனது கருத்து. அதற்கு ஏற்ற கரணியங்களைக் (காரணங்களைக்) கூறுவேன்: வந்தவர் வஞ்சக ராயின் அதை அவர்தம் முகமே காட்டிவிடும். வஞ்சக உள்ளத்தை மறைக்க முடியாது.
- "வண்டுளர் அலங்கலாய் வஞ்சர் வாள்முகம்
- கண்டதோர் பொழுதினில் தெரியும் கைதவம் உண்டெனின் அஃதவர்க்கு ஒளிக்க ஒண்னுமோ”
ஈண்டு, 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் முதுமொழியும்,
"அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்" (106)
"முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்” (708)
என்னும் குறள்களும் ஒப்பு நோக்கத் தக்கன.
மேலும் அனுமன்மொழிகிறான்: ஒருவரின் அகத்தில்
உள்ளதை அவரது வாய்ப் பேச்சைக் கேட்குமுன்பே அவரது முகம் காட்டிவிடும்.