சுந்தர சண்முகனார் 139
என்பது பாடல் பகுதி. இறுதியாக இரணியனும் நரசிங்கரும் கடுமையாகப் போர் புரிந்தனர். தோல்வியுற்றுக் கலங்கிய இரணியனை, நரசிங்கர், அந்தி நேரத்தில், அரண்மனை வாயிலில், தன் தொடைமேல் வைத்துக்கொண்டு, தன் கூரிய நகத்தால் கிழித்துப் பிளந்து மடியச் செய்தார்:
- “ஆயவன் தன்னை மாயன்
- அந்தியின், அவன் பொற்கோயில்
- வாயிலில், மணிக் கவான்மேல்
- வயிரவாள் உகிரின், வானின்
- மீயெழு குருதிபொங்க வெயில்
- விரி வயிர மார்பு
- தீ எழப் பிளந்து நீக்கித்
- தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்" (153)
மாயன் = நரசிங்கன். கவான் = தொடை. உகிர் = நகம். இரணியன் பெற்றுள்ள வரத்திற்கு மாறுபடாத வகையில், இரவும் பகலும் இல்லாத அந்தி (மாலை) நேரத்தில், உள்ளும் வெளியிலும் இல்லாதபடி அரண்மனை வாயிலில், மண்ணிலும் விண்ணிலும் இல்லாதபடி தன் தொடைமேல் வைத்து, எந்தப் படைக்கருவியாலும் இன்றி நகத்தினால் கொன்றான். மக்களோ விலங்கோ இல்லாத - இரண்டும் கலந்த நரசிங்க உருவத்துடன் பொருது கொன்றதும் ஈண்டு கவனிக்கத்தக்கது.
திருமாலாகிய நரசிங்கன் இரணியனை நகத்தால் பிளந்து கொன்றதை, நாவுக்கரசர் தமது திருத்தாண்டகத் தேவாரப் பாடல் ஒன்றில்,
- "துங்க நகத்தால் அன்றித் தொலையா வென்றித்
- தொகுதிறல் அவ்விரணியனை ஆகம் கீண்ட
- அங்கனகத் திருமால்"
(6-84–2)
எனக் குறிப்பிட்டுள்ளார். எவரும் எந்தப் படைக் கருவியாலும் தன்னைக் கொல்ல லாகாது என்ற உறுதி