சுந்தர சண்முகனார் 217
விக்கிரம சோழன் உலா
“அங்கமலக்கையும் மலரடியும் கண்ணும் கனிவாயும்
செய்ய கரிய திருமாலை” (318)
திருவேங்கட மாலை
"வாய் கண் கை உந்தி பதம் கோகனகம் பத்தினார்
குன்று வேங்கடமே” (கோகனகம்-தாமரை) - (8)
திருவரங்கக் கலம்பகம்
"அரவம் கால் சுமப்பது ஓர் அஞ்சன மலையே
அம்மலை பூத்தது ஒர் அரவிந்த வனமே” (73)
திருமாலின் கண், வாய், உந்தி, கை, அடி ஆகியவற்றிற்குத் தாமரை உவமையாக்கப்பட்டிருப்பதை மேலுள்ள பாடல் பகுதிகளால் தெளியலாம். திருமாலின் உறுப்புகள் பல தாமரை போன்றிருப்பதால், அவரது உடம்பு ஒரு தாமரைத் தடாகம் போன்றுள்ளது எனத் திருவாய் மொழி கூறியிருப்பது சுவையாக உள்ளது.
பாம்பு (ஆதிசேடன்) கரிய மலையாகிய திருமாலைச் சுமந்து கொண்டுள்ளது; அம்மலைமேல் தாமரைக் காடு பூத்திருக்கிறது எனத் திருவரங்கக் கலம்பகம் அறிவித்திருப்பது மேலும் சுவைக்கத் தக்கது. உறுப்புகள் தாமரை போன்று இருப்பதால் உடம்பு தாமரைக் காடாகத் தோன்றுகிறதாம். அரவிந்த வனம் = தாமரைக் காடு.
தாமரைக் கண்ணன்
திருமாலின் உறுப்புகட்குள் கண்ணுக்கே தாமரை ஒப்புமை மிகுதியாகத் தரப்பட்டுள்ளது. தாமரையையும் கண்ணையும் இணைத்துத் திருமாலுக்குச் சிறப்புப் பெயர்கள் சிலவும் தரப்பட்டுள்ளன. சில இலக்கிய அகச் சான்றுகள் வருமாறு: