சுந்தர சண்முகனார் 267
என்று பாராட்டி நூல் முழுவதையும் சுவைத்துப் படித்து, இலத்தீனிலும் செர்மனியிலும் மொழி பெயர்த்தாராம்.
இவ்வாறு புதிய - புரட்சியான முறையில் கருத்துகளை வழங்கியிருப்பதால் உலகைக் கவர்ந்தது.
இருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒருவர் கூறினார்: ஓர் இசையரங்கில் புல்லாங்குழல் இசையைக் கேட்டேன். அதனினும் இனிமையான ஒலி உலகில் எங்கும் இருக்கமுடியாது என்றாராம். உடனே அடுத்தவர், முதலாமவரை நோக்கி, உங்களுக்குக் குழந்தை இருக்கிறதா?என்று கேட்டாராம். இல்லை என்ற பதில் வந்ததாம். நீங்கள் குழந்தை பெற்று அந்தக் குழந்தையின் மழலை மொழியைக் கேட்டிருந்தால், உலகில் குழலின் இசையே இனியது என்று சொல்லியிருக்க மாட்டீர்கள் என்றாராம் அடுத்தவர். இந்தக் கருத்தமைத்து,
“குழல் இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"
என வள்ளுவர் பாடினார். குழவியின் மழலை இன்பத்தை எவ்வளவோ புதிய - புரட்சியான முறையில் வள்ளுவர் கூறியிருக்கிறார் பாருங்கள்!
திருகு முறை
திருவள்ளுவர் பல இடங்களிலும் கருத்துகளைத் திருக்கு முறுக்கு செய்து-அதாவது-Twist பண்ணி அமைத்திருப்பது தான் கவர்ச்சி செய்கிறது.
ஒருவன் மற்றொருவனுக்குத் துன்பம் செய்துவிட்டான். துன்புற்றவன் சினத்தோடு திருவள்ளுவரிடம் வந்து நடந்ததைக் கூறினான். திருவள்ளுவர் அவனை நோக்கி, உனக்குத் துன்பம் செய்தவனை வாளா விடக்கூடாது.