ஐவருக்கு மனைவி
115
ஒருத்தி ஐவரையும் ஐவர்க்கு மேற்பட்டவரையும் மணந்து வாழ்ந்து வருகின்றமை மேற்கூறிய சான்றுகளால் நன்கு விளங்கும். இம்மணமுறைக்கும் சிவபெருமானுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். இச்சமூக வரலாறு அறிந்திராத ஒருவர் பாஞ்சாலி வரலாற்றையும், அவளது முற்பிறப்பு வரலாற்றையும் தம் மன கற்பனையால் கட்டிவிட்டார் என்று கொள்ளுதலில் வியப்பில்லை. பாஞ்சாலி நெருப்பினின்றும் எழுந்வவள் என்ற கதையும் இக் கூற்றை மெய்ப்பிக்கும். மேலும், சங்க காலத்தில் பாஞ்சாலியைத் தெய்வமாகத் தமிழர் போற்றினர் என்பதற்குச் சான்று காண்பது அருமை.
தீப்பாய்ந்த அம்மன்
பண்டைக் காலத்தில் கணவன் இறந்தவுடன், அவன் பிரிவாற்றாது மனைவி தீப்பாய்ந்திறத்தல் பெரும்பாலும் வழக்கம் ; சிறுபான்மை கைம்பெண்ணாக இருந்து அடுத்த பிறவியில் அக்கணவனோடு ஒன்றுபட வேண்டும் என்று நோன்பிருத்தலும் வழக்கம்.
காதலர் இறப்பின் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது
இன்னுயிர் ஈவர் ; ஈயார் ஆயின்
நன்னீர்ப் பொய்கையில் நளியெரி புகுவர் ;
நளியெரி புகாஅ ராயின், அன்பரொடு
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர்"[1]
—————
- ↑ மணிமேகலை, காதை-2, வரி. 42-48,