116
தமிழ் இலக்கியக் கதைகள்
முறையில் போற்றிப் பேணினான். சில நாட்கள் தன்னோடு தங்கியிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். புலவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். அவனோடு உரையாடிப் பழகிய அந்தச் சற்று நேரத்திலேயே அவனைத் தாம் கேள்விப்பட்டு அறிந்திருந்ததை விட உயர்ந்த நிலையிற் கண்டார் அவர். திப்பைய ராயன் தம்மைக் கொண்டாடிப் பேசும் போதெல்லாம் அவனுடைய ஒவ்வொரு சொல்லும் குபேர சம்பத்தாகத் தோன்றும் அவருக்கு. தெய்வத் தன்மை வாய்ந்த தமிழ்க் காவியம் ஒன்றைத் திரும்பத் திரும்பப் படித்து நயங்காண்பது போல இருந்தது அவனோடு பழகுவது. பணிந்த உள்ளம். இனிய சொற்கள். கவிதையையும் அது பிறக்கும் நெஞ்சத்தையும் எப்படி நடத்தி மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று அறிந்து நடந்து கொள்கின்ற பண்பாடு. இவ்வளவும் திப்பையராயனிடம் இருக்கக் கண்டார் அவர்.
நாள் ஆகஆக அவனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட நட்புப் போல வேறோர் உணர்ச்சிக்கும் அவர் மனம் இடங்கொடுக்க வேண்டிய நிலை அவருக்குப்புரிந்தது. அதுதான் ஊரில் மனைவி மக்களைப் பற்றிய கவலை. “இங்கே திப்பைய ராயன் குபேரசம்பத்துப் போன்ற சொற்களால் தம்மைப் பாராட்டிப் போற்றுவதனால் அங்கே அவர்களுடைய வறுமை தீர்ந்து விடப் போகிறதா என்ன? இல்லையே” இப்படி எண்ணிப் பார்த்தபின், தாம் வந்த காரணத்தையும் தம் குடும்ப நிலையையும் எப்படியாவது குறிப்பாகத் திப்பைய ராயனுக்குச் சொல்லி விட வேண்டும் என்று அவர் நினைத்தார். மறைத்துப் பேசத் தமிழில் வார்த்தைகளா இல்லை? ஒரு நாள் வாய்ப்பு நேர்ந்தபோது தம் நிலையைக் குறிப்பாக அமைத்து ஒரு பாட்டாகவே திப்பைய ராயனிடம் அவர் பாடிக் காட்டிவிட்டார்.
“இந்திரன் கலையா யென்மருங் கிருந்தான் அக்கினி
உதரம் விட்டகலான் இயமன் எனைக்கருதான்
நானெனக் கருதி நிருதிவந்தென்னை என் செய்வான்
அந்தமாம் வருண னிருகண் விட்டகலான் அகத்தினில்