பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

121

“வாயிலொன்று கல்லுமொன்று நெல்லுமான அன்னமும்
வாடலாக ஆறுமாதம் வைத்திருந்த கத்திரிக்
காயிலிட்ட கறியும் உப்பிலாத கஞ்சி யன்னமும்
காம்பு ஒடிந்த ஓரகப்பை கைப்பிடித்த வண்ணமும்
தூயதாகத் துலக்கலின்றி யழுக்கடைந்த பாத்திரம்
தூக்கியுள் அசுத்தநீர் துரத்தி வந்த நேர்த்தியும்
ஓயலின்றி ஈக்கள் வீழ்ந்து மொலுமொலென்ற சட்டியும்
உடன் கொணர்ந்த நாகதேவன் ஊண் மறப்பதில்லையே.”

அன்னம் = சோறு, வன்னம் = குழம்பு, வண்ணம் = காட்சி, துரத்தி = விரட்டி, ஊண் = உணவு.

இப்படி நாகதேவன் சோற்றுக் சடைச் சாப்பாடு தமக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததை அந்தப் புலவர் பாடும்போது அவர்மேல் நமக்கு அனுதாபந்தான் ஏற்படுகிறது.

43. சாமர்த்திய வார்த்தை

சொல்லிலே சாமர்த்தியம் என்பது சாதாரண செயல் அல்ல. சாதுரியமும் நுணுக்கமும் சந்தர்ப்பத்திற்கேற்ற சொற் பிரயோகமும் வேண்டும். வெளிப்படைக்குச் சிறிதும் இடமில்லாமலோ, சிறிது இடங்கொடுத்தோ சாமர்த்தியத்தை வார்த்தையிலே காட்ட முடியும். ஆனால் முதன்மை என்னவோ துணுக்கமான மறை பொருளுக்குத்தான். சாமர்த்திய வார்த்தை முற்றிலும் வெளிப்படையாக இருந்துவிடக்கூடாது. இருக்கவும் முடியாது. சாமர்த்திய வசனங்களில் சாமர்த்தியந்தான் முடிமணிபோல நின்று தன்பொருளைத் தருதல் வேண்டும்.

சாமர்த்தியத்தை நிலைநாட்டிக் காட்டுவதற்கு என்றே பாடப் பெற்ற தனிப்பாடல்களும் பல உள்ளன. அவை வினா உத்தரம், சீட்டுக்கவி, சிலேடை விடுகதை முதலிய வகைகளாக விரியும். புலவர்கள் சொற்களைப் பொருள் நுணுக்கத்தோடு பாட்டில்