பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

11

கோபுரத்துடன் ‘பெண்ணொருபாகனார்’ திருக்கோயில் தென்பட்டது. அதன் மகாமண்டபத்துக் குறட்டில் தலையில் கையை வைத்தவாறு உட்கார்ந்து கொண்டார் கவிராயர். தாம் பாடிய பாடல்களை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்போல இருந்தது அவருக்கு! சுவடியை அவிழ்த்தார். முதலிலிருத்து இறுதிவரை நன்றாகப் படித்தார். இரண்டாவது மனிதன் அவற்றைப் படித்தால் எவ்வளவில் ஈடுபாடு கொள்ள முடியும் என்று எண்ணிப் பார்த்தார். அதிலுள்ள செஞ்சொற்களும் சீரிய பொருள் நயமும் அவனைக் கவரத் தவறமாட்டா என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது! ஆனால் இந்த எண்ணம் ஒரு நொடிதான் நிலைத்தது. மறு நொடி ‘ஏதோ உதவாத வெற்றுரை போலும்! அதனால்தான் கவனிப்பாரில்லை’ என்று எண்ணினார். இவ்வாறு உணர்ச்சிவசப்பட்ட தீர்மானங்களுடன் போராடிப் போராடி அவர் மனம் புண்பட்டுப் போனது. மன அமைதியை நாடிப் பெண்ணொருபாகனார் கோவிலக்குள் சென்றார். கோவிலின் மூலத் தானத்தை அடைந்ததும் பெருமானைப் பாட வேண்டுமென்று கூறியது அவரது உள்ளுணர்வு. தன் துயரை அவனாவது அறியட்டுமே என்பதுதான் அவர் எண்ணமோ என்னவோ! பாடுகிறார்.

வஞ்சகர்பால் நடந்திளைத்த காலிற் புண்ணும்
வாசல்தொறும் முட்டுண்ட தலையிற் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சிற் புண்ணும்
தீருமென்றே சங்கரன் பாற்சேர்ந்தே னப்பா!”

கவிராயர் பாட்டை இன்னும் முடிக்கவில்லை. அதற்குள் சிவபெருமானின் திருவிளையாடல்களைப்பற்றிச் சுவரில் எழுதி யிருந்த சில சித்திரங்கள் அவருடைய கண்ணில்படுகின்றன. ஒன்று - பிட்டுக்கு மண்சுமந்த இறைவன் பிரம்படிபடுவதைச் சித்திரித்தது. மற்றொன்று, கண்ணப்பன் ஒரு காலால் பெருமானை உதைத்துக் கொண்டு அவருக்குக் கண்ணளிக்கும் காட்சியை விளக்கியது. இன்னொன்றில், அருச்சுனன் கைலாயத்தில் இறைவனை அவன் வேடனுருவாக வந்தபோது வில்லால் அடிப்பதைக் காட்டியது.