பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

85

ஒரு வயிற்றுக்கே போராடிக் கொண்டிருந்த கவிராயர் இன்னொரு வயிற்றையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அழகிய இளம் மனைவியின் சிரிப்பையும், கண் பார்வையையும் பார்க்கும்போது தாம் சுந்தர்வ வாழ்க்கை வாழ்வதாக எண்ணி அவருக்கு ஒரு பிரமை உண்டாகும். வயிற்றின் பசியும், வீட்டின் ஏழைமையும் நினைவுக்கு வரும்போது கொடுமையான நரகத்தில் விழுந்து விட்டது போலிருக்கும். ஏழைக் கைகளோடும் அழகான மனைவியோடும் எத்தனை நாட்கள் பட்டினிக் குடும்பம் நடத்த முடியும்? தமக்குத் தெரிந்த கவிபாடும் கலையை வைத்துக் கொண்டு யாராவது சில செல்வர்களைச் சந்தித்துப் பொருளுதவி பெறலாமென்று அவருக்குத் தோன்றியது.

தையூரிலிருந்த முத்து முதலியார் என்ற செல்வரும் நெடுங்கலி நகர்க் கந்தசாமி முதலியார் என்ற செல்வரும் சுந்தரக் கவிராயருக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். திருமணமான புதிதில் இளம் மனைவியைப் பிரிந்து பொருள் தேடப் புறப்பட்டார் அவர் எத்தனையோ இன்பக் கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் இளம் மனைவியைப் பிரிந்து செல்வது அவர் உள்ளத்தை வேதனைப்படுத்தியது. மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு புறப்பட்டார் அவர். அந்த முயற்சியில் சில மாதங்கள் கழிந்தன. போனவுடன் வாரிக்கொண்டு வருவதற்குப் பொருள். எங்கும் குவிந்து கிடக்கவில்லையே! வேண்டியவர்களைச் சந்தித்து அவர்கள் மனம் கோணாமல் சில நாட்கள் உடனிருந்து உற்சாகமான வேளைகளைத் தெரிந்துகொண்டு கவிதை பாடிப் பொருளுதவி கேட்க வேண்டும். ஒவ்வொரு கணமும் ஊரில் தனியாக இருக்கும் மனைவி என்னென்ன எண்ணி வேதனைப்படுகிறாளோ என்று நினைத்து வருந்திக்கொண்டே கழித்தார் அவர். அவருடைய கண்களுக்கு முன்னால் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வாழும் செல்வக் குடும்பத்துத் தம்பதிகள் பலர் தென்பட்டனர்.