பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

325


யாழ்த்திறம் நான்காகவும், செவ்வழி யாழ்த்திறம் நான்காகவும் கொள்ளப்படும். ஏழு சுரங்கள் எனப்படுவன, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவாம். இவற்றை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். தமிழில் 'பண்' என்பதை வடமொழியில் 'இராகம்' என்பர். ஏழு சுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் என்றும், ஆறு சுரங்களால் ஆகியவற்றைப் பண்ணியல் என்றும், ஐந்து சுரங்களால் ஆகியவற்றைத் திறம் என்றும், நான்கு சுரங்களால் ஆகியவற்றைத் திறத்திறம் என்றும், இசை இலக்கண நூலார் கூறுவர். வட மொழியாளர் இவற்றையே சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சதுர்த்தம் என வழங்குவர்.

சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் பழந்தமிழிசையின் நுட்பம் தெற்றெனப் புலப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும், கானல்வரியால் விளங்கும் ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, கானல்வரி, நிலைவரி, முகவரி, திணை நிலைவரி, மயங்குதிணை நிலைவரி, சாயல்வரி, முதலிய பல்வேறு வரிப் பாடல்கள் இசையின் மேன்மையினையும் விரிவினையும் விளக்கவல்லன. சமணப் பெருங்காப்பியமான சீவக சிந்தாமணியில் காந்தருவ தந்தையார் இலம்பகத்தில் இடைக்காலத் தமிழிசையினைப் பரக்கக் காணலாம். மதம் பிடித்த யானையின் சீற்றத்தினை இசையால் தணித்த செய்தி உதயணன் கதையில் பேசப்படுகின்றது.

இவ்வனைத்திற்கும் மேலாகச் சமய குரவர்கள் அருளிச் செய்த தேவாரத்தில் தமிழிசையின் முழு மறுமலர்ச்சியினையும் காண்கிறோம். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர், தாண்டகவேந்தராம் திருநாவுக்கரசர், தம்பிரான் தோழராம் சுந்தரமூர்த்திகள் ஆகியோர் கழகமொடமர்ந்த கண்ணுதற் கடவுளை இன்னிசையுடன் பாடிப் பரவினர்: எண்ணற்ற தேவாரப் பதிகங்களை அருளிச் செய்தனர்.