பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

“கடைச்சங்கம் பாண்டியர் தலைநகரமாயிருந்த மதுரை மாநகரில் விளங்கியது. கபிலர், பரணர், நக்கீரர், சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், பெருங்குன்றூர்க் கிழார் உட்பட 49 புலவர்கள் வீற்றிருந்தனர். 499 புலவர்கள் பாடினர். எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் வேறு பிற நூல்களும் இப்புலவர்களால் இயற்றப்பட்டன; 1850 ஆண்டுகள் நிலவிய இச்சங்கத்தை முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பாண்டிய மன்னர்கள் போற்றிப் புரந்தனர்.”

— இச் செய்திகளை இறையனார் களவியல் உரை கூறுகிறது; இதன் ஆசிரியர் நக்கீரர்.

முதற்சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாட புரத்திலும், கடைச் சங்கம் இன்றைய மதுரையிலும் இருந்தன என்பதும். முதற்சங்கத்தில் அகத்தியமும். இடைச் சங்கத்தில் தொல்காப்பியமும், கடைச் சங்கத்தில் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் தோன்றின என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கன எனினும், அது குறிப்பிடும் ஆண்டுகளும் புலவர்களின் எண்ணிக்கையும் மிகைபடக் கூறலாகும். செவிவழிச் செய்தியாகப் பேசப்பட்டு வந்த இவற்றை நக்கீரர் தம்முரையில் குறிப்பிட்டார் என்பது பொருந்தும்.


மற்றும் பண்டைக் காலத்தில் சங்கங்கள் இருந்தன என்ற கருத்தைப் புலவர்களும்; மக்களும் நம்பினர். கீழ் வரும் சான்றுகள் அதற்குச் சான்று பகர்கின்றன.