பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

விறலியர் பொன் மாலைகள் பெறுதலும் கூறப்படுகின்றன.

கரிகாலன் இளமையில் வெண்ணிப் பறந்தலையில் சேர பாண்டியர்களை வென்ற வரலாற்றுச் செய்தி இதில் கூறப்படுகிறது.

'சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே'

- பொருநர் 246-258

வரம்பு கட்டின வேலி நிலத்தில் ஆயிரங்கலம் செந்நெல்லை விளைவிக்கும் காவிரியால் பாதுகாக்கப்படும் நாட்டுக்குரியவன் கரிகாலன் என இத்தொடர்களால் காவிரியும் கரிகாலனும் பாராட்டப்படுதல் காண்க.

3. சிறுபாணாற்றுப் படை

இது 269 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாகும். இது பாணன் ஒருவனை ஓய்மா நாட்டு நல்லியக் கோடனிடத்தே ஆற்றுப்படுத்துகிறது. இதனைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்:

'இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ' (35) என்னும் வரி சிறுபாணனைக் குறிக்கிறது. அதனால், சிறுபாணாற்றுப்படை என வழங்கலாயிற்று.

இதிலும் விறலியின் கேசாதிபாத வருணனை தக்க உவமைகளால் கூறப்பட்டுள்ளது.

'உயங்கு நாய் நாவின் நல்லெழில் அசைஇ
வயங்கிழை உலறிய அடி என விறலியின்

அடிகளுக்கு நாயின் நாவை உவமை, கூறியமை பாராட்டத் தக்கது.