பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. தமிழ் மொழியின்
பழமையும் சிறப்பும்


தமிழ் நாடு

தமிழகம் வடக்கே வேங்கடமும், தெற்கே குமரி முனையும் கொண்ட தனிப்பெரும் நாடாகும். இதனை ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ எனத் தொல்காப்பியப் பாயிரம் வகுத்துக் கூறுகிறது.

தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தி அன்புற்று இன்புற்று வாழ்ந்தனர். உயர்ந்த மலைகளும், செறிந்த காடுகளும், பரந்த வயல்களும், விரிந்த கடற்கரையும் அவர்கள் வாழ்ந்த இடங்களாகும். பொருள் தேடச் சென்ற வழிகள் காடும் மலையும் நிறைந்த பாலை நிலங்களாக விளங்கின. இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனக் குறிப்பிட்டனர்.

தென்னிந்தியாவில் குமரி முதல் வேங்கடம் வரை தமிழ் பேசப்படுகிறது. கடல் கடந்த வடஈழத்திலும் தென் ஆப்பிரிக்காவிலும், மலேயா, சிங்கப்பூர்ப் பகுதிகளிலும் தமிழ் பேசப்படுகிறது.

தமிழ்மொழி

மிகப் பழங்காலத்தில் இந்தியநாடு முழுவதிலும் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதனைப் பழந்திராவிட மொழி என்பர்; வடகிழக்குக் கணவாய் வழியாகத் துரானியரும், வடமேற்குக் கணவாய் வழியாக ஆரியரும் வந்து புகுந்தனர். அவர்களின் கலப்பால் பிராகிருதம், பாலி முதலிய புதிய மொழிகள் தோன்றின; அந்நிலையிலும் பழந்திராவிடச் சிலர் அவர்களோடு கலவாமல் தனித்து ஒதுங்கி வாழ்ந்தனர், அவர்கள் மொழி இன்றும் திராவிடத்தின் திரிபுகளாக வழங்குகின்றன. மலை நாட்டு மக்கள் பலர் திராவிடத்தின் இனமொழிகளை இன்றும் பேசி வருகின்றனர். அவற்றைத்