பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

குற்றச்சாட்டை வீசுதல் முறையன்று. கோவலன் நாடகம் தோன்றிய வரலாறு இது:

‘நளவெண்பா’ பாடிய புகழேந்திப் புலவர் பெயரால் அம்மானைப் பாடலாக நங்கைக் கதைகள் பல நமது நாட்டில் உலவி வந்தன. இக் கதைகள் நமது தாய்மார்களைப் பெரிதும் கவர்ந்தன. அல்லி அரசாணிமாலை, அபிமன்யு சுந்தரிமாலை, புலந்திரன் தூது, பவளக்கொடி மாலை, காத்தவராயன் கதை முதலிய பல கதைகள் இந்த வரிசையில் இடம் பெற்றவை. புலமைக்கடல் புகழேந்திப் புலவருக்கும் இந்தக் கதைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க முடியாது. ஆனால், இந்தப் புத்தகங்களில் எல்லாம் “புகழேந்திப் புலவர் அம்மானைப் பாடல்கள்” என்றே குறிப்பிட்டிருக்கும். தன்னை மறைத்துக் கொள்ள விரும்பிய யாரோ ஒரு புண்ணியவான் புகழேந்திப் புலவர் மீது இப் பழியைச் சுமத்தினார் என்றே கொள்ள வேண்டும்.

சுவை மிகுந்த இக் கதைகள் பெரும்பாலும் நாடகமாக்கி நடிக்கப்பட்டன. இந்த நங்கைக் கதைகளிலே ஒன்றுதான் கோவலன் என்ற பெயரால் நாடக மேடைக்கு வந்த கண்ணகி கதை.

முதலில் கோவலனை நாடக மேடைக்குக் கொண்டு வந்தவர்கள் ஆலந்தூர் ஒரிஜினல் நாடகக் கம்பெனியார் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் இந்நாடகத்தை இரண்டு பாகமாக இரண்டு இரவுகள் நடத்தினர்களாம்.

‘அல்லி பரமேஸ்வர ஐயர்’ அவர்கள் கம்பெனியில் சுவாமிகள் இருந்தபோது கோவலன் நாடகம் ஒரே இரவில் நடிக்கும் முறையில் புதிதாக எழுதப்பெற்றது. விலை மாதர் கூட்டுறவால் அல்லற்படும் இளைஞர்களுக்கு நீதி புகட்ட ஒரு புதிய கதையை எழுதுவதை விட நாடு