பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்கிறது!

9


இருசொற்கள் புணர்ந்திடுங்கால் தோன்று மொற்றை
         எடுத்துவிட்டுத் தமிழெழுதும் கூட்ட மொன்று,
“விரியுலக வழக்கினிலே விளங்கு கின்ற
         வேற்றுமொழி பலகண்டோம் புணர்ச்சி யென்னும்
ஒருவிதியைக் கண்டதில்லை! தமிழில் மட்டும்
         உண்டெனிலோ அதுபடிக்க நேர மில்லை
கருதுவதை யெழுதுங்கால் ஒற்று மிக்குக்
         காண்பதனால் என்னபயன்' என்று கேட்கும்!


செந்தமிழில் மறுமலர்ச்சி சேர்ப்ப தற்கே
         சிறுகதைகள் புதுக்கவிதை வசனப் பாட்டு
விந்தையுற எழுதுகிறோம் என்று சொல்லி
         விளையாடும் எழுத்தாளர் கூட்ட மொன்றாம் !
அந்தநாள் ஆபாசக் கதையை யெல்லாம்
         அச்சாக்கி மலிவான விலைக்கு விற்றுச்
செந்தமிழைப் பரப்புவதாய்ப் பசப்பு கின்ற
         சிறுவணிகர் கூட்டந்தான் மற்றொன் றாகும்!


இலக்கியத்தைத் தெருவெல்லாம் பரப்ப வென்றே
         எழுந்ததோர் இயக்கமெனில், தெருவின் பேச்சை
இலக்கியமாய்த் தொகுத்தெழுதிப் பெருக்கு தற்கும்
         எதிரியென ஓரியக்கம் இருக்கக் கண்டோம்.
கலக்கமின்றித் தெளிவான நீர்கு டிக்கக்
         கருதியொரு திருக்குளத்தில் இறங்கும் போது
மலக்குவையைத் தனக்குணவாய்க் கொள்ளும் பன்றி
         மணிகுளத்தில் நீராடித் திரிதல் போலே!
2