பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வல்லிக்கண்ணன்

1937 ஆம் ஆண்டு டிசம்பரில், சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் ஆண்டு விழா வேலூரில் நடைபெற்றது. அது முப்பத்திரண்டாம் ஆண்டு விழாவாகும். அவ்விழாவினைச் சுவாமிகளே தலைமை யேற்று நடத்தியருள வேண்டுமென்று அங்கத்தினர்கள் முடிவு செய்தார்கள். அவ்வண்ணமே நிகழ்ந்தது. ஆயின், அக்காலை சுவாமிகளின் உடல் நலம் கெட்டிருந்தது. எனினும், அவர்கள் இறைவன் பணியாகக் கருதி ஏற்றக்கொண்ட பணியை அவ் விறைவன் திருவருளே முன்னின்று முற்றுவிக்கு மெனக் கருதி எவரிடமும் வெளிப்படுத்தாமல் இருந்து, சொன்மாரியால் சைவப் பயிரைத் தழைப்பித்துக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்களுக்கு உடம்பு பிடித்துவிடும் பணியில் ஈடுபட்ட அன்பர்கள், உடல் கொதிப்படைந்திருப்பதறிந்து பதறிச் சுவாமிகளைக் கேட்ட போது, அவர்கள் 'எல்லாம் முருகன் திருவருள், நம் கையில் ஏதுமில்லை; பணியை ஏற்றுக் கொண்டபோது அவனே நம் உள்ளத்திலிருந்து அதனை ஏற்றுக் கொள்ளச் செய்தான்; இனி முடித்து வைப்பதும் வைக்காததும் அவன் திருவருள் வயத்தால் மட்டுமே இயலும் : நாம் எடுத்துக் கொண்ட பணியை முடிக்கவே வந்தோம். அதனை இயற்றுங்கால், உயிர் நீங்கினும் மகிழ்ச்சியே. கவலை கொள்ள வேண்டாம் என விடையிறுத்தனர். இரவில் சுரம் 1030 அளவிற்குக் கூடுவதும், பகலில் குறைவதுமாக இருந்தது. மூன்று நாளளவும் சுவாமிகள் தலைமை தாங்கி மாநாட்டைச் சிறப்பித்தருளினார்கள்.

சுவாமிகளால் எழுதப்பெற்ற சைவ ஒழுக்கம் என்னும் சிறு நூல் ஒன்று அச்சிடப் பெற்றுக் கூட்டத்தினர்க்கு வழங்கப் பெற்றது. அது யாவர்க்கும் பெரும் பயன் விளைவிக்கும் சிறு நூலாகும்.

சைவ சித்தாந்த மகா சமாசததின் முப்பத்தைந்தாம் ஆண்டுவிழா 1940 ஆண்டில் மயிலத்தில் நடத்துவதென முடிவாயிற்று. மயிலம், பொம்மபுர ஆதீனத்தின் பதினெட்டாம் பட்டமேற்று எழுந்தருளியிருந்த ஸ்ரீலஸ்ரீ - சிவஞான பாலய சுவாமிகள் தம் மடாலயத்தின் சொந்தப் பொறுப்பில் அதனை நடத்தித்தர முன் வந்தார்கள். ஞானியார் சுவாமிகள் தலைமை யேற்றருள்வார்களென்றே யாவரும் நம்பியிருந்தனர். ஆயின், அவர்கள் உடல் நலம் இடந்தரவில்லையாதலால் திருக்கோவலூரிலேயே தங்கியிருந்தார்கள்.