பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வல்லிக்கண்ணன்

சைவ சித்தாந்த மகா சமாசம் பின்னர் ஞானியாரடிகள் நினைவு நிதி திரட்டி, ஞானியாரடிகள் நினைவு மலர் (சொற்பொழிவுத் தொகுப்பு ஒன்றினைச் சமாச வெளியீடாக 1958-ஆம் ஆண்டில் மயிலத்தில் நடந்த சமாச ஆண்டு விழாவில் வெளியிட்டது)

இதுவரை சுவாமிகள் சைவ சமயம் கடைத்தேறும் வண்ணம் ஆற்றிய பல தொண்டுகளுள் ஒன்றாய சமாசத் தொண்டு பற்றி மட்டுமே கூறப்பெற்றது. பிற நிறுவனங்களோடு கொண்ட தொடர்பு பின்னர் கூறப்பெறும்.

கல்விப் பணிகள் :

கால வேறுபாட்டால்; அரசியல் வேறுபாட்டால் கலக்கம்கொள்ளாமல் உள்ளது போதுமென்ற மன நிறைவுடன் இறைவனுக்குப் பூசனை புரியப் பிறந்த பேறே பெரிதென மதித்து, ஆன்மார்த்த பூசையாம் இட்டலிங்க பூசையும், பரார்த்த பூசையாம் சிவன்கோயிற் பூசையும் ஏற்றுச்சைவத் தோடு ஒன்றிய வீரசைவப் பயிரைத்தழைப்பித்துக் கொண்டு வாழ்ந்திருந்தோர் தமிழக வீரசைவர்கள். தம்மையடைந்த சிறுவர்க்குக் கல்வியறிவு ஒழுக்கங்களையும் போதித்தவர்கள். அவர்களுள் சிற்நதவராகிய நம் சுவாமிகள் சிறந்த சோமநாத ஆராத்திரியர் வழிவந்த ஞானியார் சுவாமிகள் மடாலயத் தலைமை யேற்றருளியதால் சிறியோரும் பெரியோரும் கல்வியறி வொழுக்கங்களின் மேம்பட்டு விளங்கத் தொண்டு புரியவே, தமக்கு இப்பெரும் பொறுப்பு வாய்த்ததென்ற கருத்தினைப் பெற்றவர்கள். அவர்களது கல்வித் தொண்டால் தான் இன்று நாம், தமிழர் என்ற தலைநிமிர்ந்து நிற்கிறோம் எனில் அது புனைந்துரை யன்று.

அக்கால தமிழின் நிலை :

படிப்பு என்றால், உத்தியோகத்துக்குப் படிப்பதே யென்பதும், ஏதோ சில வகுப்புகள் வரை படித்து உத்தியோகம் பெற்றவர், மேலும் படிக்கத் தேவையில்லை யென்பதும் அயல் மொழியாளர் ஆட்சியால் நாம் அடைந்த தவறான கொள்கை. இந்த நிலையில் தாய் தமிழைப் புறக்கணிப்பாரே மல்கியிருந்தனர். அதூஉம் தமிழராய்ப் பிறந்தாரே, எனக்குத் தமிழில் பேச வராது; ஆங்கிலத்தில் வேண்டுமானால் சொற்பெருக் காற்றுகிறேன் என்று கூறும் நிலை இருந்தது. சிலர், அப்படிப் பேசுவதே தம் பெருமைக்கு ஓர் அளவு கோலெனக் கருதும் நிலை இருந்தது.