பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வல்லிக்கண்ணன்


பள்ளி எட்டாம் வகுப்பினை ஏற்று நடத்தும் வாய்ப்பு படிப்படியாய் வந்துற்றது. அப்போது, பல்கலைக் கழகப் பட்டப் படிப்பும், ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் (B.A., LT.) பெற்ற தலைமை யாசிரியரே அமர்த்தப் பெற வேண்டும். அங்ஙனம்! அமர்த்தப் பெற்ற ஒருவர் நன்றாக வேலை செய்துகொண்டிருந்தார். தன் சொந்த ஊர்ப் பக்கம் அவருக்கு வேலை கிடைக்கவே அவர் இதனை விட்டு விட்டார். 1926ஆம் ஆண்டு வேறொரு B.A., LT., ஆசிரியர் தலைமை யாசிரியராக வந்தார். அவர் சுவாமிகள் தொடர்பு இல்லாமல் வெளியூரிலிருக்கும் புரவலரிடம் நேரே தொடர்பு கொள்ளத் தொடங்கினார். 'கரைப்பார் கரைத்தால் கல்லுங்கரையு’ மன்றோ? அதுவரை மாதச் சம்பள முதலிய செலவுகள் மாதாமாதம் சுவாமிகளுக்கே வந்து சேரும். யாவரும் அவர்களிடம் பெற்றுக் கொள்ளல் வழக்கமாக இருந்தது. ஆனால் அந்தப் பட்டதாரித் தலைமை ஆசிரியருக்கு அது பிடிக்காததொரு பக்கம், தனக்கு வேறுவித வருவாய் கிடையாதே என்ற குறையும் ஒரு பக்கம். இதனால் செட்டியாரிடம், நீங்கள் செலவு செய்து பிள்ளைகளைப் படிப்பிக்கிறீர்கள். அதனைச் செட்டியார் பள்ளி என்றே கூறுகின்றனரே! இனி என்னிடம் எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படையுங்கள்; நான் பள்ளியைத் தங்கள் பெயரமைய நடத்துவதைக் காணுங்கள் என்றெல்லாம் கூறினார். பலரும் புகழ வாழ வேண்டுமெனக் கருதாதார் யார்? அவரும் அதற்கிசைந்தார். பணம் நேரடியாக அவருக்கே வந்தது. சம்பளம் கொடுக்கும் போது சிறிதளவு குறைத்துக் கொடுத்தார்; சிலருக்குப் பின் தருகிறேனென்றார்; முன் சரியாகப் பெற்றுக் கொண்டவரிடமும் இடையில் கடன் கேட்டுப் பெற்றார். கடைசியாகச் சம்பளப் பணம் வரவில்லை யென்று பொய்கூறி நம்பவைத்தார். பெரும் பொருள் கையாண்டபின் அவரே மறைவிடம் நோக்கிச் சென்று மறைந்தார்.

சுவாமிகள் அப்போதெல்லாம் வெளியிடங்களில் தொண்டு மேற்கொண்டு சென்றிருந்தார்கள். மேலும், தாமே கொண்ட அகந்தை காரணமாக அத் தொடர்புடையோர் நெருங்காதிருந்ததால், அப்பள்ளித் தொடர்பை அறவே விட்டு விட்டார்கள். பள்ளி மூடப்பெற்று விட்டது.

இதனை நினைந்து நினைந்து சுவாமிகள் வருந்துவதுண்டு. சிலர் வாயிலாகச் செட்டியார், முன்போலச் சுவாமிகளே பார்வையிடுவதாயின், மீண்டும் அப்பாடசாலையை நடத்தக்கூடு மென்றறிவித்தார். ஆனால் சுவாமிகள் அவர்களையே