பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

49


மீளுங்கால், விராலிமலை முதலாம் தலங்களை வழிபட்டுக் கொண்டு, ரெளத்திரியாண்டு, ஐப்பசித் திங்களிறு தியில் புலிசை மடாலயத்திற் கெழுந்தருளினார்கள். திருப்பாதிரிப் புலியூரன்பர்களும், வெளியூரிலிருந்து திரண்டு வந்திருந்த மாணவர்களும் சுவாமிகளைப் புதிய மேனாவில் எழுந்தருளச் செய்தும், அவர்களது உபாசனா மூர்த்தியாம் வல்லி தேவசேனா சமேத சுப்பிரமணிய மூர்த்தியை மயில் மீது எழுந்தருளச் செய்தும் நகர்வலஞ் செய்வித்து மடாலயத்தில் எழுந்தருள் வித்தார்கள். அந்நாள் நடைபெற்ற காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சென்ற இடங்களிலெல்லாம் இங்ஙனமே நகர்வல முதலிய நிகழ்ந்தன. ஆங்காங்கு சொன்மழையும் பொழிந்து சிவானந்த ஆறு கரைபுரண்டோடச் செய்தார்கள் சுவாமிகள். செவிமடை வழியே, உள்ளமாம் நிலத்தில் தேக்கிச் சிவப் பயிரை வளர்த்துக் கொண்டு முத்திப் பயனாம் பெரும் பேற்றினை யடைந்தார்கள் பலர்.

பின்னர், காலம் வாய்த்தபோது, திருத்தணிகை, திருக்காளத்தி, திருவாலங்காடு, திருப்பதி ஆம் திருத்தலங்களை வழிபட்டு விரும்பிய இடங்களிலெல்லாம் செஞ்சொல்லமுது வழங்கியதும் உண்டு.

சுவாமிகள், மேனாவிலமர்ந்து எழுந்தருளுங் காலங்களில், அதனைக் காவுவோருள், ஒருவர் 'முருகா முருகா' என ஒலியெழுப்ப, ஏனையோர், 'வேல் முருகா' என்று ஒரு சேரப் பேரொலி எழுப்புவர். 'வேல் வேல்’, ‘வேல்மயில்’, ‘ஐயாறா கிய பஞ்சநதம்’, ‘ஆறாறாகிய சிதம்பரம்' என்ற ஒலிகளும் எழுவதுண்டு. தொழும்பு பூண்ட அன்பருட் சிலர், சுவாமிகளை நெருங்கி மேனாவைப் பிடித்துக் கொண்டே இருபாலும் செல்வதும் உண்டு. அப்போதுங்கூட இறைவன் குணாதிசயங்களும், புராண வரலாறுகளும், புராண இதிகாசங்களில் நுட்பமான பகுதிகளும் அருகு செல்வோர்க்கு விளக்கப் பெறுவது இயல்பான நிகழ்ச்சியாம்.

கொங்கு நாட்டுக்கும் சுவாமிகள் இருமுறை எழுந்தருளியது உண்டு. 1925ல் சேந்த மங்கலத்தில் நடைபெற்ற பார்க்கவ குல சங்கப் பத்தாம் ஆண்டு விழாவில் தலைமை பூண்டதும், பேரூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் மடத்திற் கெழுந்தருளியதும் முன்னரே கூறப்பெற்றன.

மீண்டும் ஒருமுறை 1936ல் கொங்குநாடு நோக்கி வழிக்கொண்டார்கள். திருநணா (பவானிகூடல்) திருமுருகன்