பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

வல்லிக்கண்ணன்


மாணவர், சுவாமிகளை ஓர் பீடத்திலமர்த்தி, அவர்களில் வீரசைவ மாணவராம் திரு. உருத்திரசாமி அய்யரவர்களைக் கொண்டு அபிடேக ஆராதனை முதலிய புரிவித்தார்கள். மாணவர் யாவரும், விநாயகரகவல், திருமுருகாற்றுப் படை முதலாய நூல்களைப் பாராயணஞ் செய்து அரஹர முழக்கமிட்டனர். யாவையும் ஏற்றுக் கொண்ட அடிகளார், ‘முருகன் திருவிளையாடல்' பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். திருமுருகாற்றுப்படையின் மாண்பு பற்றி அப்போது குறிப்பிட்டு யாவருள்ளத்தினும் அந்நூலின் மீது தனிப்பற்று விளையுமாறு செய்தார்கள்.

மாலை பேரவைக்குத் தலைவர், ரசிகமணி T.K. சிதம்பரநாத முதலியாரவர்களாவர். சுவாமிகளின் நாவன்மை, கல்வித் திறன் முதலியவை பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுத் தலைமையுரையாற்றினார். மடாதிபதிகளும், பல கழகங்களும், அன்பர் - பேரறிஞர்களும் மாணவர்களும் பாராட்டு- வாழ்த்துரைகள் படித்தளித்தார்கள், வர இயலாத சிலர் அனுப்பிய பாராட்டுகள் படிக்கப் பெற்றன. -

சுவாமிகளிடம் பயின்று வித்துவான் பட்டம் பெற்ற தேவார ஓதுவார் - திரு. மு. நடராஜ தேசிகர் இடையிடையே, திருமுறைகளையும், திருப்புகழ்களையும் ஓதி, அவையினரை அரனிடத்து அன்பு கொள்ளுமாறு செய்தார்.

முதற் குருநாதர் மீது, அவர் மாணவர் அவிநாசிநாதர் இயற்றிய நெஞ்சுவிடுதூது முதலாம் தோத்திரக் கொத்து அச்சிடப்பெற்று யாவர்க்கும் இலவசமாக அளிக்கப் பெற்றது. திருமதி. க. ர. ஆதிலட்சுமி யம்மையார், கந்தரனுபூதி நூலைச் சுவாமிகளிடம் பாடங் கேட்டவாறு உரையுடன் அச்சிட்டுக் கொண்டுவந்து யாவர்க்கும் வழங்கினார்கள்.

அன்றிரவு, அறிஞர், மாணவர் புடைசூழச் சுவாமிகள் ஆலயதரிசனம் செய்தருளினார்கள். .

இரண்டாநாள் காலைநிகழ்ச்சி திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் தலைமையில் தொடங்கிற்று. சில வாழ்த்துரைகளும், வணக்கப் பாடல்களும், பாரட்டுகளும் படித்தளிக்கப் பெற்றன. பின்னர், பண்டிதமணி திரு. மு. கதிரேசன் செட்டியாரவர்கள் தலைமையில், சேலம் கல்லூரி விரிவுரையாளர், திரு. ஆந்திரக் காசியப. திம்மப்ப அந்தணனார் இயற்றியிருந்த 'ஆசானாற்றுப்படை' அரங்கேற்றப் பெற்றது. அதில் அடிகளாரின் நற்பண்புகள் பல சுவைபடப் பாராட்டப் பெற்றிருந்தன.