பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

193

அவரைச் சுண்ணாம்புக் காளவாயில் போடுவதற்குத் தயாராயிருப்பார்கள். !

தமிழ்நாட்டுச் சைவ சித்தாந்த பிரசங்கிகளில் சிலர் இங்கிலீஷ் பாஷையையும் கரைகண்டவர்கள். ஸ்பென்ஸர், ஹக்ஸ்லி முதலிய மேனாட்டுத் தத்துவ சாஸ்திரிகள் கூறிய முடிவுகளெல்லாம் சைவ சித்தாந்தததில் பொதிந்து கிடப்பதை அவர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்கள், டார்வின் கொள்கையை எத்தனையோ காலத்திற்கு முன்பு சைவ சித்தாந்தம் ஸ்தாபித்து விட்டது என்று நிரூபிப்பார்கள். ஆனால், தங்களுடைய உத்தி யோகத்திற்கோ, சம்பளத்துக்கோ, பென்ஷனுக்கோ ஏதாவது ஆபத்து வருவதாயிருந்தால், அதற்குக் காரணமாயிருப்பவர்களை ஒரு தடவையல்ல, ஏழு தடவை கழுவிலேற்றத் தயாராயிருப்பார்கள்.

இவ்வாறு சைவ சித்தாந்தப் பிரசங்கம் செய்பவர்களில் அநேகர், "சைவத்தின் உண்மையை அறிந்தவர்களுமல்ல." சைவத்தை வாழ்க்கையில் அனுஷ்டிப்பர்களுமல்ல’ என்ப தைப் பார்க்கிறோம்.

வைஷ்ணவ சித்தாந்த பிரசங்கம் செய்கிறவர்களும் சைவ சித்தாந்திகளுக்குக் கொஞ்சமும் மேற்படி விஷயங்களில் சளைத்தவர்கள் அல்ல. சைவ சித்தாந்திகளாவது மற்ற சித்தாந்தக்காரர்களைத்தான் சுண்ணாம்புக் காளவாய்க்கு அனுப்புவார்கள். வைணவ சித்தாந்திகளோ தங்களுக்குள்ளேயே வடகலையாரைத் தென்கலையாரும், தென்கலையாரை வடகலையாரும் கழுவேற்றத் தயாராயிருப்பார்கள்.

இதெல்லாம் பொதுவாக நாம் பார்த்திருக்கும் விஷயங்கள். ஆனால், விதி விலக்காக சைவத்திலும் வைஷ்ணவத்திலும் சில பெரியார்கள் இருக்கிறார்கள், அவர்கள் உண்மையாகவே சமய தத்துவங்களை உணர்ந்தவர்கள். சமய வாழ்க்கை நடத்துபவர்கள். இப்படி விதிவிலக்காயுள்ள சமயப் பெரியார்களுக்குச் சிறந்த உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால் திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீ ஞானியார்சுவாமிகளைத் தான் குறிப்பிடவேண்டும்.

அடிகளின் உருவத் தோற்றத்தைப் பார்த்ததுமே, “இதோ ஒரு பெரியார் இருக்கிறார்" என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகும். அவருடைய வாய் மொழிகளைக் கேட்டு அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். ‘அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா!" என்று எண்ணி எண்ணி வியப்போம்.