பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

65

சுவாமிகளுடைய தோற்றமும், பேச்சும் அளித்த கவர்ச்சியே இக்குழந்தையின் நடத்தைக்குக் காரணம்.

ஞானியார் சுவாமிகள் திருக்கோவிலாராதீனத்தின் பட்டமேற்று ஐம்பது ஆண்டுகள் 1939 இல் நிறைந்தன. அப்பொழுது தமிழ்நாடு முழுமையுமே அறிந்து கலந்து இன்புறும்படியான முறையில் அந்நிறைவு விழா நடைபெற்றது. ஞானியார் சுவாமிகளுக்கு அன்பு பூணாத தமிழ்ப் பண்டிதர், புலவர், அரசியல்வாதி, பிரமுகர் - யாரும் தமிழ் நாட்டில் அன்று இல்லாமல் இல்லை. அவரினும் வயதில் முதிர்ந்தோர் பலர் இருந்தார்கள். பதவியில் பெரியோர் இருந்தார்கள். ஆனால் அவர்களுள் யாரையும் அந்த விழாவில் தலைமை தாங்க அவர்கள் அழைக்கச் சொல்லவில்லை. பண்டிதர்களோடு நெடுங்காலம் பழகிப் பழகி அவர்கள் சரக்கெல்லாம் வெறும் ஆடம்பரம், ஆழமில்லாதது என்று அவர் அறிந்திருந்தார். தம்முடைய துறவு, ஆதீனத் தலைமை காரணமாக யாரையும் குறை கூறும் பழக்கத்தை அவர் வைத்துக் கொண்டதில்லை. எனினும் தம்முடைய விழாவுக்குப் போலிகளை அழைக்க அவர் விரும்பவில்லை. டி.கே.சி அவர்கள் பேச்சை அவர் இரண்டொரு முறை, காரைக்காலம்மையார் பாடலைப் பற்றிப் பேசியபோது கேட்டிருந்து, அப்பேச்சின் ஆழத்திலும், உணர்ச்சியிலும் மனம் ஒன்றியிருந்தார். எனவே, இந்த நிறைவு விழாவுக்கு அவரையே தலைமை வகிக்கும்படிக் கேட்டுக் கொள்ளச் செய்தார். அனேகருக்கு அக்காலத்தில் இது மிக்க வியப்பளித்தது. பெரும் புலவர்கள், ஞானியாருக்கு வேண்டியவர்கள் என்று நினைத்தவர்கள் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, பண்டிதரல்லர் என்று பண்டிதர்களால் ஒதுக்கப்பட்டவரை அவர் அழைக்கச் செய்தது, அவர்கள் கருத்தின்படித் தவறுதானே? இச்செயல் அடிப்படையில் ஞானியார் சுவாமிகளின் உள்ளம் எப்படி உண்மையை நாடிற்று என்பதையே காட்டிற்று. அக்காலத்தில் டி.கே.சி. யவர்கள் எந்தப் பதவியிலும் இருக்கவில்லையென்பதை நினைவு கூரவேண்டும்.

ஞானியார் சுவாமிகள் சமயப் பிரசங்கத்தில் ஒரு புதிய பாணி அல்லது பத்தியைத் தோற்றுவித்தார்கள். தொடங்கும்போது விநாயகர் வணக்கம், முருகன் வணக்கம், குரு வணக்கம், தமது மடத்தின் முதல்வர் வணக்கம் என இவற்றோடு பேச்சுத் தொடங்கும்.