பக்கம்:தரும தீபிகை 1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தரும தீபிகை


ஏன் பிரிந்தோம்! எப்பொழுது வந்தோம்? எதற்காக இப்படி வேறு வேறு உருவாய் மாறுபாடு மண்டிச் சீரழிகின்றோம்? எனின், அப்பேரிழவு பேசும் தரமன்று; கூரிய சீரிய தத்துவக் காட்சியால் ஒருவாறு உய்த்துணரலாமன்றி எத்துணையும் உரைக்க இயலாது; ஒருவேளை இயன்ற அளவு எழுத முயன்ருல் ஈண்டு இடம் பெருகும் என்க. உணர்வு தாய்மையான பொழுது அவ்வாய்மை தானே புலனாம். உண்மைதெரிய நன்மை வருகிறது.

சீவன் எனச் சிவன் என்ன வேறில்லை;
சீவனார் சிவனாரை யறிகிலர்;
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனா யிட்டி ருப்பரே." (திருமந்திரம்)

என்னும் இம் மந்திரம் ஈண்டு நன்கு சிந்திக்கவேண்டும்.

மாசு = மனக்குற்றம். என்றது பாவத்தீமைகளை. இந்த ஈனத்தீமையால் மனிதன் ஈனன் ஆகின்றான்; ஆகவே புண்ணிய மூர்த்திபால் போக முடியாமல் புலைப்பட்டு உழல லாயினான்.

ஈசன், தருமவுருவன்; சத்தியசீலன்; தயாநிதி. இப்பண்புகளை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் அடைகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் ஈசனை அணுகுகின்றான்; எவ்வளவு இழந்துள்ளானோ அவ்வளவு தூரம் அவனை அகன்று போய் இழிந்து ஒழிகின்றான். நிலைமை குலையத் தலைமை குலைந்தது.

மனிதன், ஒருபடி மேல் ஏறினால் மகாத்துமா; இன்னும் ஒருபடி மேலே போனால் பரமாத்துமா ஆகின்றான். அவன், ஒருபடி கீழ் இறங்கினால் துராத்துமா; மீண்டும் ஒருபடி கீழே சென்றால் அதமாத்துமாவாய் அதோ கதியில் வீழ்ந்து யாண்டும் அவலமாய் அலமந்து உழல்கின்றான் என்க. தன்னை உயர்த்தவும். தாழ்த்தவும் தானே காரணனாய் மனிதன் பூரண வுரிமை பெற்றுள்ளமை இதனால் இனிது புலனாம்.

பாவ எண்ணங்கள் மனிதனை நீசனாக்கி நாசப்படுத்தும் ஆதலால் அவற்றை அறவே ஒழித்து உய்ய வேண்டும் என்பது கருத்து. ஈசன் ஆகுக; நீசன் ஆகாதே.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/17&oldid=1439525" இலிருந்து மீள்விக்கப்பட்டது