பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

79



49. தமிழில் மறுமலர்ச்சி

பூக்குஞ் செடிகொடியில் போதாய் ஒருமுறைதான்
பூக்கள் மலரும்; புவியோர் மலர்ச்சியென்பர்;
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமலர் வாடி முடிந்தவிடின்
மீண்டும் மலர்ச்சியிலை; மீண்டும் மலர்வதைத்தான்
யாண்டும் மறுமலர்ச்சி என்று புகன்றிடுவர்;
தெவ்வர் பலவகையாற் செய்துவிட்ட தீமைகளால்
செவ்வையுற வாழ்ந்ததொன்று சீர்கெட்டு வாடியபின்
மற்றுமொரு வாய்ப்பதனால் வாழ்வுயர்ந்து சீரடைந்தால்
கற்றவர்கள் அந்நிலையைக் காணின் மறுமலர்ச்சி
என்று மொழிவர் இதற்கொரு சான்றுரைப்பேன்;
சென்று முகில்புகுந்து செல்லும் முழுமதிதான்
தேய்ந்து குறைந்துவரும் தேய்ந்தாலும் மீண்டும்ஒளி
தோய்ந்து வளர்ந்துவரத் தோன்றும் மறுமலர்ச்சி;
காலத்தால் முந்துமொழி காப்பியங்கள் தந்தமொழி
ஞாலத்து மூத்தமொழி நல்லறங்கள் பூத்தமொழி
என்றெல்லாம் சான்றோர் இசைக்குமொழி செந்தமிழ்தான்
அன்றிந்தத் தென்னாட்டில் ஆட்சி செலுத்தியது;
எப்படியோ யார்யாரோ இந்நாட்டி னுட்புகுந்த
தப்பதனால் எல்லாத் தவறுகளும் நேர்ந்துவிடப்
புன்மைச் செயலுக்குப் புத்தியைநாம் ஒற்றிவைத்தோம்
நன்மலர்ச்சி குன்றி நலங்கெட்டு வாடியதே!
ஆனாலும் நல்லவர்தாம் நாட்டிற் பலர்தோன்றி
மேனாளில் ஊட்டும் உணர்வதனால் தாய்மொழிக்கு
நாட்டாட்சி வேண்டுமென நல்லுரிமைப் போர்புரிந்தோம்
கேட்டாட்சி செய்தோர்தாம் கேளாராய் வந்தெதிர்த்தார்;
தானே இயங்குந் தகுதிபெற்று வாழ்ந்தமொழி
தேனே எனத்தக்க தெள்ளத் தெளிந்தமொழி
வேற்று மொழிச்சொற்கள் வீணே கலந்தமையால்
நேற்றுவரை தாழ்ந்து நிலைகுலைந்து வீழ்ந்தமையால்
கண்ட மறைமலையும் கல்யாண சுந்தரரும்
தொண்டு மனங்கொண்டு தூற்றலுக்கும் அஞ்சாது
நாடோறும் பாடுபட்டு நல்ல தமிழ்வளர்த்தே