பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

3



கூவினான் மீண்டுங் குரலெடுத்துக் கூவினான்;
கோட்டிற் குயிலொன்று குக்குக்கூ என்றொலிக்கக்
கேட்டான் கிளைக்குயில்போற் கூவினான் வாய்குவித்தே;
ஒட்டி இருகுரலும் ஓரொலியாய்த் தொட்டிசைக்க
விட்டுவிட்டுக் கூவி விளையாடிக் கொண்டிருந்தோன்
கிட்டும் பெருமகிழ்வால் கொட்டினான் கையிரண்டும்
கொட்டினான் கூவினான், கூவின கொட்டினான்
கூவுதலுங் கொட்டுதலுங் கூடி இசையென்றும்
மேவிவருந் தாளமென்றும் மேதினியில் பூத்தனகாண்;
எண்ணுங் கருத்தை எடுத்துரைக்க அம்மாந்தன்
கண்ணசைத்தான் கையசைத்தான் காலங் கடந்துவரப்
பைய அவன் நாவசைத்தான்; பாலோ தெளிதேனோ
செய்ய ஒரு நற்கரும்பின் தீஞ்சாறோ என்னஒரு
சொன்மொழிந்தான் மீண்டுமதைச் சொன்னான், எதனாலோ
பன்முறையும் பன்னிப் பழகினான் அச்சொல்லை;
சொல்லிப் பழகுமொழி மெல்லத் தமிழாகி
இல்லைநிகர் என்ன இயலாய்க் கனிந்ததுகாண்;
இவ்வண்ணம் முத்தமிழாய் ஏற்றம் பெறுமொழியை
எவ்வண்ணம் ஏத்திப் புகழ்வோம்நாம்? அம்மொழியில்
கூத்தும் இசையுங் குறிக்கின்ற நூலெங்கே?
ஏத்தும் இயல்நூலில் ஏனையவை தாமெங்கே?
பாழுங் கடல்கோளும் பாவிப் பகைக்குலமும்
சூழுங் கொடுவினையால் சொல்லரிய ஏடுகள்தாம்
காணா தொழிந்தனவே; கண்மூடிக் கொள்கையினால்
மாணாச் செயல்செய்தோம் மற்றும் பல இழந்தோம்;
ஆடிப் பெருக்கிலிட்டோம் அந்தோ நெருப்பிலிட்டோம்
வேடிக்கை மாந்தர் விளையாட்டை என்னென்போம்!
அஞ்சியஞ்சிச் சாகாமல் ஆளடிமை யாகாமல்
எஞ்சியவை காப்போம் இனி.

(விருது நகர், செந்தில்குமார நாடார் கல்லுரிக் கவியரங்கம்)