பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தாய்மொழி காப்போம்



3. தமிழ் காப்போம்

எண்ணுடையாள், எழுத்துடையாள், காலங் காணா
எழிலுடையாள், இளைமையினாள், கோலங் கண்டு
கண்ணுடையார் எனவாழ்ந்தோம்; ஆனால் இன்று
கண்ணொன்றை இழந்து விட்டோம்; கீழ்வாய் என்னும்
எண்ணறிவார் எவருள்ளார்? தமிழர் கண்ட
எண்வடிவம் மறைந்துவரும் நிலைமை கண்டோம்
புண்ணுடைய நெஞ்சுடையோம்; மாற்றார் ஆட்சி
புகுந்தமையால் விளைந்தவொரு தீமை யன்றோ?

எஞ்சியுள் எழுத்தேனும் முன்னோர் கண்ட
இயல்புடனே நிலைத்திடுதற் குறுதி யில்லை;
வஞ்சமனம் படைத்தவர்தாம் வேற்று நாட்டு
வரிவடிவைப் புகுத்துதற்கு முயலு கின்றார்;
நெஞ்சமிதை நினைந்துவிடின் வெந்து போகும்;
நெறிகெட்ட இம்முறைதான் என்று சாகும்?
அஞ்சுவது கெஞ்சுவது மடமை யாகும்;
ஆர்ப்பரித்துக் கேட்பதுதான் கடமை யாகும்

இந்நாட்டிற் குரியனவென் றியம்பு கின்ற
ஈரேழு மொழிகளுக்கும் உரிமை வேண்டும்
வெந்காட்ட ஒருமொழியும் அதன்மே லேறி
வீற்றிருக்க ஒருமொழியும் வேண்டா! வேண்டா!!
என்னாட்டிற் கலைக்கூடம் ஆட்சி மன்றம்
எத்துறையும் தமிழ்மொழியின் ஆட்சிவேண்டும்;
இந்நாட்டம் நிறைவெய்த வில்லை என்றால்
இருந்தென்ன வாழ்ந்தென்ன சாவே மேலாம்.

இவ்வண்ணம் தமிழ்காக்க முனைவோர் தம்மை
இழிமொழிகள் சொலலன்றி ஆட்சி செய்வோர்
செய்வண்ணம் அறியாராய்ப் புலம்பு கின்றார்;
தேர்தலிலே நாற்காலி பற்று தற்கே
இவ்வண்ணம் தமிழ்தமிழென் றியம்பு கின்றார்
என்றுரைப்பர் நாற்காலிப் புத்தி கொண்டோர்;
உய்வண்ணம் அவர்க்குரைக்க வல்லார் யாரோ?
உரைத்தாலும் கேட்கின்ற நல்லார் யாரோ?


(வெந்-முதுகு)