பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

5



எப்படியோ அரசிருக்கை கிடைத்து விட்டால்
எடுபிடிகள் ஆளம்பும் அமைந்துவிட்டால்
அப்படியே ஒட்டிக் கொண் டகல மாட்டார்,
அடுக்கடுக்காய்ப் பழிவரினும் இறங்க மாட்டார்,
எப்பொழுதோ ஒருநாளில் வெறுத்தாற் போல
இப்பதவி வேண்டேனென் றெழுந்து நிற்பர்,
அப்பொழுதே மீண்டுமதில் அமர்ந்து கொள்வர்,
அவர்நம்மை எள்ளிஉரை யாடு கின்றார்.

காலந்தான் இவர்தம்மைத் திருத்த வேண்டும்
கடுகிவரும் அணுகிவரும் தேர்தல் என்னுங்
காலந்தான் இவர்க்கறிவு புகட்ட வேண்டும்;
கண்திறந்து தமிழரென உணர்வர் அந்நாள்;
ஞாலந்தான் இவர்க்குரிமைச் சொத்தா என்ன?
நமக்குமதில் உரிமையிலை என்றா எண்ணம்?
கோலந்தான் கலையாதோ? இவர்கள் செய்யும்
கொட்டந்தான் அடங்காதோ? அடங்கும் நாளை!

ஈன்றெடுத்த தாய்மொழிக்கு வாழ்வு வேண்டி
எடுத்துரைக்க முனைந்ததுமோர் குற்றம் ஆமோ?
ஆன்றவிந்த கொள்கையினார் தமிழ்மொ ழிக்கே
அரசுரிமை வேண்டியதும் குற்றம் ஆமோ?
ஏன் புகுந்தார் சிறைக்கூடம்? ஆசா னாக
இருந்தசிலர் பதவியையும் ஏனி ழந்தார்?
நான்றுணிந்து கூறிடுவேன் பதவி என்ன
நற்றமிழின் உயர்ந்ததுவோ சீசீ தூசி

மாநிலத்து மொழிகாணாப் புதுமை கண்டு
வகைப்படுத்தி அகம்புறமாப் பொருளைச் சொல்லித்
தேனிகர்த்த சுவைப்பாவால் பத்துப் பாட்டும்
தித்திக்கும் தொகை எட்டும் பாடி வைத்த
பாநலத்தைப், பொருள்வளத்தை, நுகர்ந்த உள்ளம்
பணியாது; பெருமிதத்தால் நிமிர்ந்து நிற்கும்;
கானகத்துப் புலிப்போத்தாய் வீரங் காட்டும்;
கவிதைக்கு விளைநிலமாய்க் காட்சி நல்கும்.