பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தாய்மொழி காப்போம்



கண்ணகிக்கு வரப்போகும் இடர்நி னைந்து
கண்ணீரை நிறைத்துடலம் தோன்றா வண்ணம்
வண்ணமலர் பலகொண்டு மறைத்துச் சென்றாள்
வையையெனும் குலக்கொடிஎன் றிளங்கோ சொல்வார்;
அண்ணலெனும் இலக்குவனார்க் குற்ற துன்ப
[1]அவலநிலை கண்டுள்ளம் நொந்து நொந்து
மண்மிசையே வரஅஞ்சி மணலுட் புக்கு
மறைந்துகொண்டாள் அவளென்று நான்பு கல்வேன்;

சிறைசெல்லப் புலவர்சிலர் வேண்டும் இன்று;
செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று
முறைசெய்ய பதவிதனை இழப்ப தற்கும்
முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டு மின்று;
குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க்
குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும்;
நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள்
நிற்குமுதற் புலவன்நான் ஆக வேண்டும்;

பிறந்தநிலம் ஒன்றுண்டு வணங்கல் வேண்டும்
பேகமொழி ஒன்றுண்டு போற்றல் வேண்டும்
சிறந்தபொருள் இவற்றின்மேல் ஒன்றும் இல்லை
சிந்தித்தே இவைகாக்க முனைவோம் வாரீர்!
கரந்துவரும் பகையுண்டு நினைவிற் கொள்க!
காலமெலாம் அடிமைசெய விழைதல் வேண்டா!
இறந்தபினும் தலைமுறைகள் நம்மை வாழ்த்த
ஏற்றசெயல் ஈதொன்றே காப்போம் வாரீர்!

(மதுரை எழுத்தாளர் மன்றத்தில் நடை பெற்ற கவியரங்கில்)


  1. பேராசிரியர் இலக்குவனார் பதவிநீக்கம் செய்யப்பட்ட அவலம்