பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

13



இனிவிடுத்தால் தமிழ்மொழிக்கும் நமக்குந் தீங்காம்
எனக்கருதித் தமிழகமே கொதித்தெழுந்து
முனைமுகத்துத் தலைநிமிர்ந்து நிற்கக் கண்டோம்;
மூண்டுவரும் மொழிப்போரில் வாழ்வா சாவா
எனநினைத்துத் தமதுயிரைச் சிறிதென் றெண்ணி
இனியதமிழ் காப்பதென உறுதி பூண்டு
தினவெடுத்த போர்மறவர் திரண்டு நின்று
திரும்பிச்செல் திரும்பிச்செல் இந்திப் பெண்ணே

என்றுரைத்துக் கனன்றெழுந்து வீரம் மிக்க
எம்மினத்தார் அணிவகுத்தார்; இந்தி ஆட்சி
கொன்றழித்த பிணக்குவியல் கொஞ்சம் அல்ல;
கொடுங்கோன்மை கட்டவிழ்த்துக் கொண்டு சீறி
நின்றிழைத்த கொடுமைகளும் கொஞ்ச மல்ல;
நெடுந்தவத்தாற் பெற்றெடுத்த பிள்ளை மார்பில்
சென்றடித்த குண்டுகளும் கொஞ்ச மல்ல;
சிறையகத்துப் பட்டோரும் கொஞ்ச மல்லர்;

ஐயிரண்டு திங்களுடல் சுமந்து பெற்ற
அரும்புகளை இழந்தமையால் நொந்த தாயர்
கையிரண்டும் பிசைந்தழுத கண்ணீர் வெள்ளம்
கண்டவர்தம் கல்மனமுங் கரைந்து போகும்;
மையிருண்ட மேகமெனச் செந்நீர் சிந்த
மாணவர்தம் மார்பகத்தே குண்டு பாய்ந்து
மெய்யிருந்த உயிர்குடித்துச் சென்ற தந்தோ!
மேலவர்தம் ஆட்சியில் இம் மாட்சி கண்டோம்!

பன்முறையால் இந்தியினைப் புகுத்த எண்ணிப்
படுதோல்வி கண்டபினும், மக்கள் மன்றில்
புன்முறையால் இழிமொழிகள் பேசக் கேட்டுப்
பொன்றுயிராய்க் குற்றுயிராய்க் கிடந்த போதும்
வன்முறைதான் பேசுகின்றார்; பட்டா ளத்தை
வரவழைப்போம் இந்தியினைத் திணிப்போம் என்ற
பொன்மொழியே உதிர்க்கின்றார்; மக்களாட்சிப்
பூமாலை இவர்கையிற் படும்பா டென்னே!